பக்கம் எண் :
 
197

197. நூ: உருபுடை வேற்றுமை ஆறும் தொக்கும்
       விரிந்தும் வரினவை வேற்றுமை வழியே
       வினைபண்-புவமை உம்மைஅன் மொழியென
       வேற்றுமை தவிர்ந்த பிறதொகை ஐந்தும்
       எழுவாய் விளிஇரண் டெச்சம்; முற்றடுக்(கு)
       இடைச்சொல் பன்னிரண்(டு) அல்வழி யாகும்.

    பொ : உருபுடைய வேற்றுமைகளான இரண்டு முதல் ஏழு வரைப்பட்ட
ஆறு வேற்றுமை உருபுகள் வெளிப்படையான விரியாகவும் மறைந்து
தொகையாகவும் வந்தால் அவை வேற்றுமை வழியாகும்.  வேற்றுமைத்
தொகை தவிர்ந்தபிற வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை,
உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்னும் ஐந்துதொகையும்,
எழுவாயும், விளியும், பெயரெச்சமும், வினையெச்சமும், வினைமுற்றும்,
அடுக்கும், வேற்றுமை உருபு தவிர்ந்த இடைச் சொற்களும் ஆய
பன்னிரண்டும் வேற்றுமை அல்லாத வழியாம்.

    விரி : வேற்றுமை தவிர்ந்த என்பதனை இடைச்சொல்லோடும் கூட்டுக.
பொதுவியலில் அடுக்கும், பிறவனைத்தும் சொல்லியலிலும் அமைந்துள. 
இருவழிப் பொருளுணர்ச்சியே புணர்ச்சியைப் புரிந்துகொள்ள அடிப்படை
யாகலின் முன்னூல்களுக்கு மாறாகச் சொல்லியலை.  முன்வைத்துப்
புணரியலைப் பின்வைத்ததாம்.

உயிர்முன் உயிர்

198. நூ: ‘உயிரோ டுயிர்வந் தொன்றுங்காலை
        இஈ ஐவழி யவ்வும் ஏனை
        உயிர்வழி வவ்வும் ஏமுன் இருமையும்
        ஒருமை யுறுஞ்சொலில் உடன்படு மெய்யாம்’

    பொ: உயிரிறுதிச் சொல்லொடு உயிர்முதற்சொல் வந்து புணரும்போது
இ, ஈ, ஐ என்னும் மூன்று எழுத்திறுதி முன் ‘ய்’ யும், பிறவுயிர் முன் ‘வ்’
வும், ‘ஏ’ என்னும் உயிர்முன் ய், வ் இரண்டும் ஒருமைப்பட்டு நிற்கும்
சொற்களில் மட்டும் உடன்படு மெய்யாம் என்பது.

    சா: கரியடுப்பு; ஈயோசை; இலையுதிர்காலம்.  பலவுயிர்; பலாவினிது;
அதுவன்று; பூ வலர்ந்தது; சேவுடையார்; கோவில்; கோயில் என்பது
வழுவமைதி; கௌவெனல்; (கூவிற்று; கூயிற்று - என்பன இருநிலை).