255. நூ: ‘மவ்வீ றொற்றொழிந் துயரீறொப்ப’
உயிருடன் படுமெய் வலிமிகல் உளவாம்.
பொ:
மகரவிறுதிச் சொல் சிலவிடத்து மகரம்கெடவிதியீறாய் உயிர்
இறுதி போல நின்று உயிர்வரின்
உடன்படுமெய்யும், வலிவரின் மிகலும்
உளவாகும்.
சா:
மரவுரல், வட்டவிருக்கை, சட்டக்கலை, மருத்துவத் தொழில்,
மரச்செதிள், வட்டப்பலகை.
256. நூ: மவ்வே மெலிவரின் மறையும் இருவழி
பொ:
மகரஇறுதி மெலிமுதல் வந்தால் இருவழியும் மறையும்.
சா:
மனமாற்றம், அகநெகிழ்ச்சி, பெருஞாலம். அகநக நட்பது நட்பு,
மரமுறிந்தது, வருஞாயிறு.
257. நூ: மகரம் வலிமுன் மெலிவும் இடைவரின்
இயல்பும் வம்முன் நலிவும்
ஆகும்.
பொ:
மகரம் கெடாவிடத்து வலிமுன் அதற்கினமாய் மெலிந்து வரலும்,
இடைமுதல்வரின் இயல்பும் இடையினத்து
வகரமுன் நலிந்து ஒலித்தலும்
உடைத்தாகும்.
சா:
வருங்காலம், மரஞ்செடி; செந்தாமரை. வரு(ம்) வழி, தரு(ம்)
வளவன் முதலியன குறுகி ஒலிக்கும்.
இதனை மகரக் குறுக்கம் என்பர்.
இதனான் அம்+வயிறு=அவ்வயிறு (சங்க இலக்கியம்) என இலக்கியம்
புணர்க்கும். இக்குறுகொலி ஈரெழுத்தும் இதழ்ப் பிறப்புடைமையான்
அமையும். இனமாத்திரியுங்கால்
பகரத்திற்கு இயல்பாதலும்
அத்தன்மையானே. சிலவிடத்து யாமுன் இகரம் பெறுதல் முன் கூறினாம்.
258. நூ: அரசித் தமிழோ டுரசிக் கலந்த
அயன்மொழி ஏதும் அருமைப் புணர்ச்சித்
திறமுறல் இன்மையான் தமிழொலி சிதைந்த
புணர்முறை பொதிந்த, இந்நாள் மிக்க
புணர்வகை எல்லாம் பொருந்தக் கொளலே.
பொ:
அரசிபோலும் வீற்றிருக்கை வாய்ந்த தமிழ்ச் சொல்லொலியோடு
உராய்ந்து கலந்த அயன்மொழிச்
சொற்கள் எவையும் அருமைப்பாடுடைய
இப்புணர்ச்சித் திறன்கள் பெற்றிருத்தல் இன்மையால் தமிழொலி
சிதைந்த,
இயல்பாகவே புணர்முறைகள் குவிந்த இந்நாளில் புதிய
மொழித்தொடர்ப்போக்கால் மிகுந்துள்ள
புணர்வகைகளை யெல்லாம்
பொருந்துமாறு அறிந்துகொள்க.
|