பக்கம் எண் :
 
பொருளதிகாரம்252முத்துவீரியம்

(கு-ரை.) உகல் இடம் - அழிதற்குரிய இடம்.

கண்புதைக்க வருந்தல்

என்பது, தலைமகள் நாணிக் கண்புதைக்க, இவள் கண் புதைக்கின்றது தன்னுடைய
கண்க ளென்னை வருத்தத்தைச் செய்யுமென்றாகாதே என வுட்கொண்டு, யான்
வருந்தாதொழிய வேண்டுவையாயின், நின் மேனி முழுதும் புதைப்பாயெனத் தலைமகன்
வருத்தமிகுதி கூறல்.

(வ-று.)

தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேயென்னை நீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும் புதைநின்னை வாணுதலே. (திருக். 43)

(கு-ரை.) கண் புதைத்து என்னை வாழச் செய்தாய்; அது போதுவதன்று. நின் உடல்
முழுதும் மறைத்து என் துயரகற்றுவாயாக எனத் தலைவன் கூறினான்.

நாண்விட வருந்தல்

என்பது, தலைமகன் தனதாற்றாமை மிகுதிகூறக் கேட்டு, ஒருநாளுந் தன்னைவிட்டு
நீங்காத நாண் அழலைச்சேர்ந்த மெழுகு போலத் தன்னை விட்டு நீங்கா நிற்பத்,
தலைமகளதற்குப் பிரிவாற்றாது வருந்தல்.

(வ-று.)

குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழிய ரோமற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த
அருநா ணளிய அழல்சேர் மெழுகொத் தழிகின்றதே. (திருக். 44)

மருங்கணைதல்

என்பது, தலைமகள் நாணிழந்து வருந்தச் சென்று கூடலாகாமையின், தலைமகன் தன்
ஆதரவினால் வருத்தந் தணிப்பான் போன்று, முலையொடு முனிந்து, ஒரு கையால்
இறுமருங்குல் தாங்கியும், ஒருகையால் அளிக்குலம் விலக்கி அளகந் தொட்டும்
சென்றணையா நிற்றல்.