பக்கம் எண் :
 
பொருளதிகாரம்257முத்துவீரியம்

(கு-ரை.) பணிவோர் மருங்கு இருங்களியாய் யான் இன்று இறுமாப்ப இன்பம் அளியா
அனல் ஆடவல்லோன் எனக் கூட்டுக. பணியும் அடியவர்களுக்குப் பெருங் களிப்பையும்
இன்பத்தையும் அளிக்க வல்லவன் இறைவன்; அதனால் அவ்வடியவர்கள் இறுமாந்திருப்பர்
என்பது கருத்து. ‘இறுமாந்திருப்பன் கொலோ’ என்ற அருள் வாக்கும் உன்னுக.

கலைமான் வினாதல்

என்பது, வேழம் வினாவி உள்புகுந்த பின்னர், தான் கண்ணால் இடர்ப்பட்டமை
தோன்ற, நும்முடைய கண்கள் போலும் கணைபொருதலான் உண்டாகிய புண்ணொடு,
இப்புனத்தின்கண் ஒரு கலைமான் வரக்கண்டீரோவெனக் கலைமான் வினாவாநிற்றல்.

(வ-று.)

கருங்கண் ணனையறி யாமைநின் றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே. (திருக். 53)

வழி வினாதல்

என்பது, கலைமான் வினாவியவன் கருத்து வேறெனத் தோழியறிய, அதனொடு
மாறுபடநின்று அதுகூறீராயின், நும்மூர்க்குப் போகும் நெறி கூறுமினென்று வழிவினாவா
நிற்றல்.

(வ-று.)

சிலம்பணி கொண்டசெஞ் சீறடி பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள எனைக்கொடுத் தோன்கொண்டு தானணியும்
கலம்பணி கொண்டிடம் அம்பலங் கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநுஞ் சீறூர்க் குரைமின்கள் சென்னெறியே. (திருக். 54)

பதி வினாதல்

என்பது, மாறுபட நின்று வழி வினாவவும் அதற்கு மறுமொழி கொடாதாரை
எதிர்முகமாக நின்று, வழிகூறீராயின், நும் பதிகூறல் பழியன்றே அது கூறுவீராமினென்று
அவர்பதி வினாவல்.