பக்கம் எண் :
 
பொருளதிகாரம்368முத்துவீரியம்

27. காவற் பிரிவு

என்பது, எல்லா வுயிர்களையும் அரசன் பாதுகாக்க வென்னும் தருமநூல் விதியான்
அக் காவற்குப் பிரிதல்.

அதன்வகை

857. பிரிவறி வித்தலும் பிரிவுகேட் டிரங்கலும்
     வருபவை யிரண்டும் வையங் காவ
     லாகு மென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, பிரிவறிவித்தல், பிரிவுகேட்டிரங்கல் ஆகிய இரண்டும் காவற் பிரிவாம்.

அவற்றுள் பிரிவறிவித்தல்

என்பது, தருமநூல் விதியால், நமருலகத்தைப் பாதுகாப்பான் பிரியக்கருதா
நின்றாரெனத், தலைமகன் காவலுக்குப் பிரியக்கருதா நின்றமை தோழி தலைமகளுக்கு
அறிவியா நிற்றல்.

(வ-று.)

மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்றில்லை யானரு ளால்விரி நீருலகம்
காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயற்கண்
பூப்பால் நலமொளி ரும்புரி தாழ்குழற் பூங்கொடியே. (திருக். 312)

பிரிவு கேட்டிரங்கல்

என்பது, பிரிவறிவித்த தோழிக்கு, முற்காலத்துக் குரவர்களாற் பாதுகாக்கப்படும்
நம்மை வந்து யானை தெறப்புக, அதனை விலக்கி, நம் முயிர் தந்தவர், இன்று
தம்மல்லதில்லாத இக்காலத்துத் தாம் நினைந்திருக்கின்ற திதுவோ, இது தமக்குத்
தகுமோவெனத், தலைமகனது பிரிவு கேட்டுத் தலைமகளிரங்கல்.

(வ-று.)

சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் உய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது வோவின்று சூழ்கின்றதே. (திருக். 313) (5)

காவற்பிரிவு முற்றும்.