பக்கம் எண் :
 
பொருளதிகாரம்261முத்துவீரியம்

என்பது, வாட்டம் வினாதலொன்றும் முன்னுறவுணர்தல். அஃது தலைமகன் இங்ஙனம்
வினாயதற் கெல்லாந் தோழி மறுமொழி கொடாளாகத் தலைமகன் வாடினான், வாடவே
தலைமகளும் அதுகண்டு வாடினாளாதலால், இருவர் வாட்டமும் வினாவப் படுதல்.
அன்றியும், முன்னர்த் தலைமகன் வாட்டத்தைப் பாங்கன் வினாயதுபோலத் தலைவி
வாட்டத்தையும் பாங்கிவினாதல், முன்னுற்றதனை யுணர்தலானே இதற்கு முன்னுற
வுணர்தலெனப் பெயராயிற்று.

வாட்டம் வினாதல்

என்பது, தலைமகன் மதியுடம்படுத்து வருந்தா நிற்பக்கண்டு எம்பெருமான் என்
பொருட்டால் இவ்வாறு இடர்ப்படுகிறாரெனத், தலைமகள் தன்னுள்ளே கவன்று வருந்த,
அதுகண்டு, சுனையாடிச் சிலம்பெதிர் அழைத்தோ; பிறிதொன்றினானோ; நீவாடிய
தென்னோவெனத், தோழி தலைமகள் வாட்டம் வினாவல்.

(வ-று.)

நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை மலையின் உயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. (திருக். 62) (13)

முன்னுறவுணர்தல் முற்றும்.

14. குறையுறவுணர்தல்

என்பது, தலைமகன் குறையுறத், தோழி அதனைத் துணிந்துணரா நிற்றல்.

அதன் வகை

842. குறையுற்று நிற்றலும் அவன்குறிப் பறிதலும்
     அவள்குறிப் பறிதலு மவர்நினை வெண்ணலுங்
     கூறிய நான்குங் குறையுற வுணர்வே.

என்பது, குறையுற்று நிற்றல், அவன் குறிப்பறிதல், அவள் குறிப்பறிதல்,
இருவர்நினைவு மொருவழியுணர்தல் ஆகிய நான்குங் குறையுறவுணர்தலாம்.