பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்35முத்துவீரியம்

(இ-ள்.) மொழி பெயரெனவும், வினையெனவும் இருவகையாம். (5)

பெயர்

120. பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலொடு
     வருவது பெயரென வழுத்தப் படுமே.

(இ-ள்.) பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகையான்
வருவது பெயராகுமென்க.

(வ-று.) பொன்னன், பொருளால் வருபெயர், அகத்தன், இடத்தால் வருபெயர்.
வேனிலான், காலத்தால் வருபெயர். மூக்கன், சினையால் வருபெயர், கரியன், குணத்தால்
வருபெயர். ஓதுவான், தொழிலால் வருபெயர்.

(வி-ரை.) பொருள், இடம் காலம், சினை, குணம், தொழிலின் வருபெயர் (நன் - பத
- 5) என்பதற்கேற்ப அவ்வறுவகையான் வருவது பெயர் என்றார். (6)

வினை

121. வினைபல நிகழினும் வினையெனப் படுமே.

(இ-ள்.) பலவாக வினைகள் நடப்பினும் வினையாகுமென்க.

(வ-று.) நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண்,
பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு.

(வி-ரை.)

‘‘நடவா மடிசீ விடுகூ வேவை
நொப்போ வௌவுரிஞ் உண்பொருந் திரும்தின்
தேய்பார் செல்வவ் வாழ்கேள் அஃகென்று
எய்திய விருபான் மூன்றா மீற்றவும்
செய்யென் னேவல் வினைப்பகாப் பதமே’’

(நன் - பதவியல் - 10) என்பர் நன்னூலார். (7)

பெயர்திணைபால் இடங்கட்கு உரியதாமாறு

122. பெயரிரு திணையைம் பான்மூ விடம்பெறும்.

(இ-ள்.) பெயர், உயர்திணை அஃறிணையாகிய விருதிணையும், ஆண்பால் பெண்பால்
பலர்பால் ஒன்றன்பால் பலவின்