பக்கம் எண் :
 
பொருளதிகாரம்371முத்துவீரியம்

பிரிந்தமை கூறல்

என்பது, தம்மைவந்து அடைந்த வேந்தனுக்குத் தாம் உதவி செய்வாராக, வெய்ய
போரையுடைய பாசறை மேல் நமர் சென்றார், இனி அவ்வேந்தன் பகைவராலிடப்பட்ட
மதில் இன்றென்னாய் முடியுமோவென, தலைமகன் வேந்தற்குற்றுழிப் பிரிந்தமை தோழி
தலைமகளுக்குக் கூறல்.

(வ-று.)

போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென் றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய்விளை கின்றதின் றொன்னார் இடுமதிலே. (திருக். 316)

பிரிவாற்றாமை கார்மிசைவைத்தல்

என்பது, பிரிவுகேட்ட தலைமகள், தனது வருத்தங்கண்டு, காதலர் வினைவயிற்
பிரிய, நீ வருந்தினால் வினைமுடியுமாறென்னோ வென்ற தோழிக்கு, யான் அவர்
பிரிந்ததற்கு வருந்துகின்றேனல்லேன், இக்கார்முகில் சென்று அப்பாசறைக்கண்ணே
தோன்றுமாயின், நம்மை நினைந்து ஆற்றாராய், அவ்வினை முடிக்க மாட்டாரென்று அதற்கு
வருந்துகின்றேனெனக், கார்மிசை வைத்துத் தனது வருத்தங் கூறல்.

(வ-று.)

பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. (திருக். 317)

வானோக்கி வருந்தல்

என்பது, உற்றுழிப் பிரிந்த தலைமகன், பார்ப்புக்களோடு பெடைக்குருகைச் சேவல்
தன் சிறகால் ஒடுக்கிப் பனியான்வரு மிக்க குளிரைப் பாதுகாக்கின்ற இரவின்கண், எனது
போதரவு அவளுக் கென்னாங் கொல்லோவெனத், தலைமகள் வடிவை நினைந்து
வானைநோக்கி வருந்தா நிற்றல்.