பக்கம் எண் :
 
பொருளதிகாரம்372முத்துவீரியம்

(வ-று.)

கோலித் திகழ்சிற கொன்றின் ஒடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன தாங்கொலென் போதரவே. (திருக். 318)

கூதிர்கண்டு கவறல்

என்பது, விழாநின்ற பனியிடத்து எல்லாரும் நெருப்புத்திரளை மேவாநிற்ப,
மலைத்திரளையேறித் துணையில்லாதாரைத் தேடும் புயலினம், நமக்கே யன்றித் தம்மை
யடைந்தார்க்கு உதவிசெய்யச் சென்றார்க்கும் பொருந்துமோ, பொருந்துமாயின், நம்மை
நினைந்தாற்றாராய், அவ்வினை முடிக்கமாட்டாரெனத், தலைமகள் கூதிர்கண்டு
கவலாநிற்றல்.

(வ-று.)

கருப்பினம் மேவும் பொழிற்றில்லை மன்னன்கண் ஆரருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென் றல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மாலெழில் தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பினம் ஏறித் தமியரைப் பார்க்கும் புயலினமே. (திருக். 319)

முன்பனிக்கு நொந்துரைத்தல்

என்பது, மக்களே யன்றிப் புள்ளுந்தம் பெடையைச் சிறகால் ஒடுக்கிப்,
பிள்ளைகளையுந் தழுவி, இனஞ் சூழ வெருவாது துயிலப் பெறுகின்ற இம் மயங்கிருட்கண்,
இடையறாது விழாநின்ற பனியிடைக் கிடந்து வாடித் துயர்வாயாக வென்றென்னைப்
பெற்றவளை நோவதல்லது, யான் யாரை நோவேனென, முன்பனிக்காற்றாது தாயொடு
நொந்துகூறா நிற்றல்.

(வ-று.)

சுற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கவென்று
பெற்றவ ளேயெனைப் பெற்றாள் பெடைசிற கானொடுக்கிப்
புற்றில வாளர வன்றில்லைப் புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப் பெறுமிம் மயங்கிருளே. (திருக். 320)

(கு-ரை.) துயர்க - துயர்கூர்வையாக.