பக்கம் எண் :
 
பொருளதிகாரம்379முத்துவீரியம்

ஆற்றாது புலம்பல்

என்பது, பிரிவு நினைவுரைப்பக்கேட்ட தலைமகள், இத்தோழியாகிய கொடியவள்
இத்தன்மையை யறிந்திருந்தும், அன்பர் பிரிவரெனக், குவளைப்பூ வெறிதற்கு வாளுறை
கழித்தாற்போலக் கூறினாள், இதற்கியான் கூறுவதுண்டோவென ஆற்றாது புலம்பல்.

(வ-று.)

சிறுவாள் உகிருற் றுறாமுன்னஞ் சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ தஞ்சனம் அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வர் அன்பரென் றம்ம கொடியவளே. (திருக். 334)

ஆற்றாமை கூறல்

என்பது, தலைமகள் வருத்தங்கண்ட தோழி, காதலர் கானலாகிய சுரத்திற் போய்ப்
பொருள் தேட நினையா நின்றாரென்று யான் கூறுமளவில், அவள் கண்ணு முலையு
முத்தும் பொன்னுந் தாரா நின்றன, இனி நீ சேட்சென்று தேடும் பொருள் யாதோவெனத்,
தோழி தலைமகனுக்கு அவளது பிரிவாற்றாமை கூறல்.

(வ-று.)

வானக் கடிமதிற் றில்லையெங் கூத்தனை யேத்தலர்போல்
கானக் கடஞ்செல்வர் காதல ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க் கண்கண்முத் தம்வளர்க்கும்
தேனக்க தார்மன்னன் என்னோ இனிச்சென்று தேர்பொருளே. (திருக். 335)

திணைபெயர்த்துரைத்தல்

என்பது, யான் அவற்கு நினதாற்றாமை கூறினேன், இனி அவர் நினைவறியேனென்ற
தோழிக்குத், தாமெனக் கருளைப்புலப் படுத்திய சொற்களெல்லா மறந்தோ காவலர்
தீவினையேற்குப் பொருளைத்தரத் தொடங்குகின்ற தெனப், பிரிவுள்ளிப், பாலை
நிலத்தனாகிய தலைமகனை மருத நிலத்தனாக்கித், தலைமகள் புலந்து கூறாநிற்றல்.