பக்கம் எண் :
 
பொருளதிகாரம்405முத்துவீரியம்

(வ-று.)

இயன்மன்னும் அன்புதந் தார்க்கென் னிலையிமை யோரிறைஞ்சும்
செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
புயன்மன்னு குன்றிற் பொருவேல் துணையாப் பொம்மென்னிருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி தேரும் அதரகத்தே. (திருக். 395)

புதல்வன் மேல் வைத்துப் புலவி தீர்தல்

என்பது, துனி யொழித்துக் கூடிப் பிரிந்தவழிப் பின்னும் பரத்தை மாட்டுப்
பிரிந்தானென்று கேட்டுப் புலந்து வாயின் மறுக்க, வாயிற்கணின்று விளையாடுகின்ற
புதல்வனை யெடுத்தணைத்துத் தம்பலமிட்டு முத்தங் கொடுத்து அது வாயிலாக் கொண்டு,
தலைமகன், செல்லாநிற்ப, அப்புதல்வனை வாங்கி யணைத்துக்கொண்டு, அவன்
வாயிற்றம்பலந் தன் மெய்யிற் படுதலா னெல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக்
கொண்டு வந்தோ நீ யெம்மைக் கொண்டாடுவது, அது கிடக்க, இதனை நினக்குத் தந்தவா
றியம்புவாயாக வெனப், புதல்வன்மேல் வைத்துத் தலைமகள் புலவிதீரா நிற்றல்.

(வ-று.)

கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித் தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை யீசர்வண் டில்லைநல்லார்
பொதுத்தம் பலங்கொணர்ந் தோபுதல் வாவெம்மைப் பூசிப்பதே. (திருக். 396)

கலவியிடத்தூடல்

என்பது, புதல்வனை வாயிலாகப் புக்குப் புலவி தீர்த்துப் புணரலுற்ற தலைமகனைத்
தலைமகளொரு காரணத்தால் வெகுண்டவன் மார்பகத்து தைப்ப, அவ்வெகுடல் தீரவேண்டி
அவனவள் காலைத் தன்றலைமேலேற்றுக்கொள்ள, அது குறையாகவவள் புலந்தழா
நின்றமையை யவ்விடத்துழையர் தம்முட் கூறல்.

(வ-று.)

சிலைமலி வாணுதல் எங்கைய தாகம் எனச்செழும்பூண்
மலைமலி மார்பின் உதைப்பத்தந் தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற் கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே. (திருக். 397)