எழுத்ததிகாரம் | 42 | முத்துவீரியம் |
(இ-ள்.) தேசிக மென்பது
திசைச் சொல்லாம்.
(வ-று.) தாய், தள்ளை,
தந்தை, அச்சன், பிறவுமன்ன. (33)
தற்சமம்
148. ஆரியந் தமிழ்பொது
வாமொழி தற்சமம்
(இ-ள்.) ஆரியத்திற்குந்
தமிழிற்கும் பொதுவெழுத்தாலாகிய மொழி
தற்சமமாமென்க.
(வ-று.) அமலம், கமலம்,
காரணம் பிறவுமன்ன. (34)
சந்தியின் வகை
149. சந்தி தீர்க்கங்
குணமே விருத்தி
எனமூ வகைப்படு மென்மனார்
புலவர்.
(இ-ள்.) சந்தி,
தீர்க்கசந்தியெனவும், குணசந்தி யெனவும்,
விருத்தி சந்தியெனவும்
மூவகைப்படுமென்க. (35)
தீர்க்கசந்தி
150. அ, ஆ, விறுதிமுன் அ, ஆ, வரினே
இருமையுங் கெடவா வேற்கு மென்ப.
(இ-ள்.) அகர ஆகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், அகர ஆகாரங்களை
முதலாகிய சொல்வரின் நிலைமொழியீறும் வருமொழி
முதலுங் கெட்டு ஆகாரமாகும்.
(வ-று.)
பத+அம்புயம்=பதாம்புயம். சேநா+அதிபதி=சேநாதிபதி
எனவரும். (36)
இதுவுமது
151. இ, ஈ, யிறுதிமுன் இ, ஈ, வரினே
இருமையுங் கெடவீ யேற்கு மென்ப.
(இ-ள்.) இகர ஈகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன் இகர ஈகாரங்கள் முதலாகிய
சொல்வரின் நிலைமொழி யிறுதியும்
வருமொழி முதலுங் கெட்டு ஈகாரமாகும்.
(வ-று.)
மகி+இந்திரன்=மகீந்திரன்,
கரீ+இந்திரன்=கரீந்திரன் எனவரும். (37)
|