எழுத்ததிகாரம் | 43 | முத்துவீரியம் |
இதுவுமது
152. உ, ஊ, விறுதிமுன், உ, ஊ, வரினே
இருமையுங் கெடவூ வேற்கு மென்ப.
(இ-ள்.) உகர ஊகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், உகர ஊகாரங்களை
முதலாகிய சொல்வரின் நிலைமொழி யிறுதியும்
வருமொழி முதலுங்கெட்டு ஊகாரம் வரும்.
(வ-று.) குரு + உபதேசம் =
குரூபதேசம். சுயம்பூ + உபதேசம் = சுயம்பூபதேசம்
எனவரும். (38)
குணசந்தி
153. அ, ஆ, விறுதிமுன், இ, ஈ, வரினே
இருமையுங் கெடவே யேற்கு மென்ப.
(இ-ள்.) அகர ஆகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், இகர ஈகாரங்களை
முதலாகிய சொல்வரின் நிலைமொழி யிறுதியும்
வருமொழி முதலுங்கெட்டு ஏகாரம் வரும்.
(வ-று.) நர + இந்திரன் =
நரேந்திரன். உமா + ஈசன் = உமேசன் எனவரும். (39)
இதுவுமது
154. அ, ஆ, விறுதிமுன் உ, ஊ, வரினே
இருமையுங் கெடவோ வெய்து மென்ப.
(இ-ள்.) அகர ஆகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், உகர ஊகாரங்களை
முதலிலேயுடைய சொல்வரின் நிலைமொழி யிறுதியும்
வருமொழி முதலுங்கெட்டு ஓகாரம்
வரும்.
(வ-று.) தாம + உதரன் =
தாமோதரன். கங்கா + உற்பத்தி = கங்கோற்பத்தி
எனவரும்.
(40)
விருத்தி சந்தி
155. அ, ஆ, விறுதிமுன் எ, ஐ, வரினே
இருமையுங் கெடவை யெய்து மென்ப.
(இ-ள்.) அகர ஆகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், எகர ஐகாரங்களை
முதலிலேயுடைய சொல்வரின் நிலைமொழியிறுதியும்
வருமொழி முதலுங்கெட்டு ஐகாரம்
வரும்.
|