பக்கம் எண் :
 
அணியதிகாரம்549முத்துவீரியம்

வண்மைசால் காஞ்சி வளம்பதியு மெந்நாளும்
உண்மையா னுண்டிவ் வுலகு. (தண்டி-மேற்)

பழிப்பொப்புமைக் கூட்டம்:

கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர்
வல்லே மழையறுக்குங் கோள். (தண்டி-மேற்) (97)

விரோதவணி

1251. முரணப் படும்பொரு ளொடுமொழி யானும்
     முரணப் படுமியல் பாக்கமுற் றோன்றல்
     விரோத மெனப்பெயர் வேண்டப் படுமே.

என்பது, மாறுபட்டபொருளானுஞ் சொல்லானு மாறுபடுந் தன்மை விளைவு முன்னர்த்
தோன்றல் விரோதவணி.

(வ-று.)

சோலை பயிலுங் குயின்மழலை சோர்ந்தடங்க
ஆலு மயிற்கணங்க ளார்த்தெழுந்த-ஞாலங்
குளிர்ந்த முகில்கறுத்த கோபஞ் சிவந்த
விளர்ந்த துணைப்பிரிந்தார் மெய். (தண்டி-மேற்) (98)

மாறுபடு புகழ்நிலையணி

1252. கவிகரு தியபொருள் கரந்து மற்றதனை
      நிந்திப்ப தற்குமற் றொன்றனை நினைத்துப்
      புகழ்வது மாறு படுபுகழ் நிலையே.

என்பது, செய்யுளெண்ணிய பொருளை மறைத்து அப்பொருளை நிந்திப்பதற்கு
வேறொரு பொருளைப் புகழ்வது மாறுபடு புகழ்நிலை.

(வ-று.)

இரவறியா யாவரையும் பின்செல்லா நல்ல
தருநிழலுந் தண்ணீரும் புல்லு-மொருவர்
படைத்தனவுங் கொள்ளாவிப் புள்ளிமான் பார்மேற்
றுடைத்தனவே யன்றோ துயர். (தண்டி-மேற்) (99)