பக்கம் எண் :
 
42நேமி நாதம்

2சொல்லதிகாரம்

 

                        மொழியாக்க மரபு

                        தற்சிறப்புப் பாயிரம்


   க.  தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
      போதார் நறுந்தெரியற் போர் வேற்கட் - பேதாய்
      விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
      தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.


     என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்னுதலிற்றோ? எனின், அதிகார
நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயருரைப்பவே விளங்கும். ஆயின்,
இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ? எனின், சொல்லதிகாரம் என்னும்
பெயர்த்து, சொல்லினது இலக்கணம் உணர்த்தினமையான். போக பூமியான
காலத்து எழுத்து இன்றிக், கன்ம பூமியான காலத்து எழுத்துத்தோன்றின; 
இத்துணையல்லது, சொற்போல எக்காலத்துந் தொடர்ந்து வாராத எழுத்தினை
முன்வைத்தல் பிழை; சொல்லையே முன்வைக்கற்பாலது எனின், அற்றன்று;
எழுத்தாலே வந்த சொல்லாதலால், ஆக்குவதனை முன் உணர்த்தி,
அதனாலாயதனைப் பின் உணர்த்தினாற் பிழையன்று; மரபு என்க. இஃது
எழுத்ததிகாரத்தோ டியைபு.
 
     அஃதாக, இதன் முதல் அடையக்கிடந்த ஓத்து என்ன பெயர்த்தோ?
எனின், மொழியாக்க மரபு என்னும் பெயர்த்து. என்னை? ஒருவன் மேல்
ஆமாறு இது, ஒருத்தி மேல் ஆமாறு இது, பலர்  மேல் ஆமாறு இது,
ஒன்றன் மேல் ஆமாறு இது, பலவற்றின் மேல் ஆமாறு இது, வழுவாமாறு
இது, வழுவமையுமாறு இது, என மொழிகள் மேலாமாறு உணர்த்தினமையின்.
அஃதேல், இவ்வோத்தினுள் இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின்?
சிறப்புப் பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று. சிறப்புப் பாயிரமும் பொதுப்
பாயிரமும் முன் பகர்ந்த எல்லாம் உரைத்துக் கொள்க.

      இ - ள்: பழையவாய்ப் பரந்து கிடந்த நூல்களினும், புதியவாய்
நல்லோராற் சொல்லப்பட்டு நடைபெற்றுவருஞ்சொற்களினும் வேண்டுவன
கொண்டு சொல்லினை ஆராய்ந்து கூறு படுத்துச் சொல்லுவன் எ-று.