''அறியான் வினாத லறிவொப்புக் காண்டல்
ஐய மறுத்தல் அவனறிவு தான்கோடல்
மெய்யவற்குக் காட்டலோடு ஐவகை வினாவே.''
என்றார் ஆகலின்.
‘கருது' என்று மிகுத்துச் சொல்லியவதனால்,
உவமை நான்கு
வகைப்படும்; அவையாவன: வினை, பயன், மெய், உரு என. அவற்றுள்,
வினையுவமையாவது புலிபாய்ந் தாங்குப் பாய்ந்தான் என்றல். பயனுவமை
ஆவது மழைபோன்ற வண்கை என்றல். மெய் உவமை ஆவது துடியிடை
யென்றல். உருவுவமை ஆவது பொன்மேனி என்றல். என்னை?
வினைபயன் மெய்யுரு வென்ற நான்கே
வகைபெற வந்த வுவமத் தோற்றம்.
(தொல்.உவம. 1)
(6)
என்றார் ஆகலின்.
விடையின் வழுவமைதி
7. ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும்
ஏவல் உறுவதுகூற் றிந்நான்கும் - பேதாய்
மறுத்தல் உடன்படுதல் அன்றெனினு மன்ற
இறுத்தலே போலும் இவை.
எ - ன்:
வழுவமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
வினாவெதிர் வினாதலும், உற்றதுரைத்தலும், ஏவுதலும்,
உறுவது கூறலும் என நான்கும் உடன்படுதலும் மறுத்தலுமே ஆயினும்,
வினாவிற்கு இறைபட வருதலால் வழு அன்று என்க.
அவை வருமாறு: சாத்தா கருவூர்க்குச் செல்லாயோ? என்றால்,
செல்லேனோ? என்றல் வினாவெதிர் வினாதல். இது செல்வேன் என்னும்
பொருள் பட்டது; ஆதலால் உடம்பாடாயிற்று. சாத்தா கருவூர்க்குச்
செல்லாயோ? என்றால் என் கால் முட்குத்திற்று என்றல் உற்றதுரைத்தல்.
சாத்தா கருவூர்க்குச் செல்லாயோ என்றால், நீ செல் என்றல் ஏவுதல். சாத்தா
கருவூர்க்குச் செல்லாயோ என்றால் பகைவர் எறிவர் என்றல் உறுவது கூறல்.
இவை மூன்றும் செல்லேன் என்னும் பொருள் பட்டன; ஆதலால்
உடம்பாடு அன்றாயிற்று; ஆதலால். உடன்படுதலும் மறுத்தலுமேயாய்
அடங்கிற்று எனக் கொள்க.
(7)
|