| கோட்டுஉறு பூந்துணர்க் குலவிய கொழும்தேன் |
| கூட்டுஉண அளிமுரல் குளிர்நிழல் பொதும்பரும் |
| உளபல உயிரையும் ஓம்புவார் தவம்என |
| வளர்தரு செந்நெல் வயங்கிய வயல்களும் |
| கறைமிடற்று அண்ணல் ஆதிய கடவுளர் |
| உறைதரற்கு அமைத்த உயர்ஆ லயங்களும் |
| அந்தணர் சைவர் ஆதியர் வாழும் |
| சுந்தர மாளிகை தொக்கபல் வீதியும் |
| திருமகள் கலைமகள் திறம்பா வாழ்க்கையும் |
| மருவிய நெல்லை வளநகர் அதனில் (30) |
| சைவக் குலத்தில் தழைத்துஇனிது அமர்ந்தோன்; |
| மெய்வைத்த நாவினன்; மேதகு மனத்தோன்; |
| செந்தினா யகன்எனத் திருப்பெயர் புனைந்தோன் |
| புந்திநைந்து இயற்றும் பொருவறு தவத்தால் |
| தேவரும் வியப்பத் தெருள்மிகு மகவுஆய் |
| யாவரும் காண இருநிலத்து அவதரித்து |
| அண்டர் சேனைக்கு அதிபன்ஆ ணையினால் |
| தண்ட பாணிஎனத் தனிப்பெயர் தரித்துப் |
| பிறந்தநாள் முதலாப் பேசரும் அற்புதத் |
| திறங்கள்பற் பலவாச் சிறந்துஉறத் திகழ்ந்து (40) |
| சிற்றெரும்பு ஒன்றைச் செகுத்தியேல் அதற்கும் |
| மற்றுஎலா உயிர்க்கும் வணங்கும்உன் றனக்கும் |
| நம்திரு வடிநிழல் நன்குஅளிக் குதும்என |
| முந்திய முதல்வனே முன்வந்து உரைப்பினும் |
| “ஐய ! அம் முத்தி அடியேற்கு ஆகாது; |
| உய்யநன்கு அருள்” என உரைக்கும் உரன்உற்று |
| அகத்தியன் ஆதிமெய் யடியவர் அடித்துகள் |
| மகத்துவம் தெரிந்துதன் மணிச்சிரத்து அணிந்து |
| மாயா வாத மருளினர் வெருள்உற |
| ஓயாப் பத்தி உயர்நெறி ஒழுகி |
| அலைவுறு மனத்தினர் அறியாத் |
| தலைவன்ஆம் முருக தாசதே சிகனே. (52) |