பக்கம் எண் :
 

 பாயிரம்                                                11

     ‘இச்சூத்திரம் என் நுதலிற்றோ?’ எனின், சிறப்புப் பாயிரம்
 உணர்த்துதல் நுதலிற்று. என்னை?

     ‘வணக்கம் அதிகாரம் என்றிரண்டும் சொல்லச்
     சிறப்பென்னும் பாயிர மாம்.’

 என்றாராகலின்.

     அச்சூத்திரப் பொருள் உரைக்கின்றுழிச் சூத்திரத்தின் விகற்பமும், ‘சூத்திரம்’ என்ற சொற்குப் பொருளும் உரைத்து உரைக்கப்படும்.

     சூத்திரம் ஆறு வகைப்படும். பெயர்ச்சூத்திரம், விதிச் சூத்திரம், விலக்கியற்சூத்திரம், நியமச்சூத்திரம், அதிகாரச் சூத்திரம், ஞாபகச்சூத்திரம் என. ‘பெயரே தொகையே’ என்ப ஆகலின்.

     அவற்றுள் பெயர்ச்சூத்திரமாவது, இடுகுறியானும் காரணக் குறியானும், பொது வகையானும் இலக்கணங்கட்கு ஓர் உபகாரம் நோக்கி, ‘இஃது இதற்குப் பெயர்,’ என்று இடுவது.

     விதிச்சூத்திரமாவது,

     ‘இன்ன தொன்றிற் கிதுவாம் என்று
     முன்னில் லதனை மொழிவ தாகும்.’

     விலக்கியற்சூத்திரமாவது, பொது வகையான் விதிக்கப் பட்டதனை அவ்வகை ஆகாது என்பது.

     நியமச்சூத்திரமாவது, முன் ஒன்றனால் முடிய வைத்துப் பின்னும் அதனையே எடுத்துக்கொண்டு விதி முகத்தான் விலக்குவதூஉம், விலக்கும் வகையான் விதிப்பதூஉம் ஆம் எனக் கொள்க.

     அதிகாரச்சூத்திரமாவது, ஆற்றொழுக்கு, அரிமான்நோக்கம், சார்ச்சிவழி1ஒழுகுதல், தவளைப் பாய்த்து என்பவற்றுள் ஒன்று ஏற்கும் வகையால் இயைந்து பொருள் விளைப்பது.

     ஞாபகச் சூத்திரமாவது, எளிதும் சிறிதுமாக இயற்றற் பாலதனை அரிதும் பெரிதுமாக இயற்றிப் பிறிதொரு பொருளை அறிவிப்பது.


 பி-ம். 1 சாரச்சில்வழி.