1. உறுப்பியல்
எழுத்தோத்து
1.) யாப்பு
எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கொடு இழுக்கா நடைய தியாப்பெனப் படுமே.
‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், ‘யாப்பாவது இன்னது’, என்று
தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : எழுத்தும், அசையும், சீரும், தளையும், அடியும்,
தொடையும், தூக்கும் என்னும் இவ்வேழுறுப்போடும் புணர்ந்து குற்ற மின்றி
நடைபெறுவது ‘யாப்பு’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது (என்றவாறு).
உம்மைகள் தொக்கன. ‘ஒடு’, எண் ஒடு.
‘இவ்வேழுறுப்பினும்தீர்ந்து யாப்பு உண்டோ?’ எனின்,
இல்லை.
‘என் போல?’ எனின், முப்பத்திரண்டு உறுப்பொடு புணர்ந்தது மக்கட்
சட்டகம் என்றால், முப்பத்திரண்டு உறுப்பினும் தீர்ந்து மக்கட்சட்டகம்
இல்லை. அதுபோலக் கொள்க. அல்லதூஉம், பிறரும் கூறினார், என்னை?
‘யாப்பெனப் படுவ தியாதென வினவின்
தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும்
நோக்கிற் றென்ப நுணங்கி யோரே.’
என்றார்நற்றத்தனார்.
‘இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
தமிழியல் வரைப்பிற் றானினிது விளங்கி
யாப்பிய றானே யாப்புற விரிப்பின்
எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கொடு
குறிப்பு : 32 உறுப்பாவன, திருவரங்கக் கலம்பகம் 56-ஆம் செய்யுளிற்
கண்டு கொள்க; மக்கட் சட்டகம் - மனித சரீரம். விளங்கியாப்பியல்
(விளங்கு + யாப்பியல்) வினைத்தொகை. |