பக்கம் எண் :
 

 உறுப்பியல் - எழுத்தோத்து                                17

     இழுக்கா மரபின் இவற்றோடு பிறவும்
     ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே.’

 என்றார் பல்காயனார்.

     இவற்றை இடுகுறியானும் காரணக்குறியானும் வழங்குவ. அவற்றுள் காரணக்குறியான் வழங்குமாறு:

     ‘எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்து
     அசைத்திசை கோடலின் அசையே; அசையியைந்து
     சீர்கொள நிற்றலிற் சீரே; சீரிரண்டு
     தட்டு நிற்றலிற் றளையே; அத்தளை
     அடுத்து நடத்தலின் அடியே; அடியிரண்டு
     தொடுத்தல் முதலாயின தொடையே; அத்தொடை
     தூக்கிற் றொடர்ந் திசைத்தலின் தூக்கெனப் படுமே.’

 என்றார் ஆசிரியர் எனக் கொள்க.

     ‘இவை இம்முறையே வைத்ததற்கு என்னையோ காரணம்?’ எனின்,
 எழுத்து எல்லா உறுப்புக்கும் முதற்காரணம் ஆதலின், சிறப்புடைத்து என்று
 முன் வைத்தார். என்னை?

     ‘சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்.’

 என்பது தந்திர உத்தி ஆகலான். எழுத்தின் பின்னர் அசை வைத்தார், அசை எழுத்தினான் ஆமாகலின். அசையின் பின்னர்ச்சீர் வைத்தார், சீர் அசையினான் ஆமாகலின், சீரின் பின்னர்த்தளை வைத்தார். தளை சீரினால் ஆமாகலின். தளையின் பின்னர் அடிவைத்தார், அடி தளையினான் ஆமாகலின். அடியின் பின்னர்த் தொடை வைத்தார், தொடை அடியினான் ஆமாகலின். தொடையின் பின்னர்த் தூக்கு வைத்தார், தூக்கு தொடையினான் ஆமாகலின். ‘தூக்கு’ எனினும், ‘பாட்டு’ எனினும், ‘பா’ எனினும் ஒக்கும். என்னை?

     ‘யாப்புந்
     தூக்கும் பாட்டும் பாவும் ஒன்றென1
     நோக்கிற் றென்ப நுணங்கி யோரே.’

 என்றார் பல்காயனார் ஆகலானும்,

 

   பி - ம். 1 தொடர்பும் செய்யுளை.

     குறிப்பு : தூங்குதல் - செறிதல் : தூங்கிருள் இறும்பில் (புறம் : 126) ‘அவை முற்றிய’ என்பது எழுத்து அசை முதலிய உறுப்புக்களைக் குறிக்கும்.