பக்கம் எண் :
 

 2                                     யாப்பருங்கல விருத்தி

     இன் - ஐந்தாவதன் உருபு; வாங்கல் - அதன் வயிற்கோடல்; ‘நனியென் கிளவி மிகுதிப் பொருட்டே’.

 என்றாராகலின், ‘நனி’ என்றதற்கு ஈண்டு ‘மிகவும்’ எனப் பொருள் கொண்டார். ஒடு - உடனிகழ்ச்சி.

     ‘வகுத்தோன் தவத்தோன்,’ என்று கூட்டுக. ஏகாரம், ஈற்றசை.

சிறப்புப் பாயிரம்

     வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய
     அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே.

 என்பது சூத்திரம்.

 நூல் நுதலியது உரைக்குமிடத்து நூலாமாறும், நூலின் விகற்பமும், ‘நூல்’ என்றசொற்குப் பொருளும், நூலாற் பயனும் உரைத்து உரைக்கற்பாற்று.

 நூலாவது,

     முதல்நடு இறுதி மறுதலைப் படாது
     தொகைவகை விரியின் உட்பொருள் தோன்ற
     உரையொடு புணர்ந்த ஒழுக்கிற் றாகிச்
     சூத்திரம் ஓத்துப் படலம் பிண்டமென்
     றியாப்புறுத் தமைத்த அவயவத்தாகி

 நடப்பது. என்னை?

     நூலெனப் படுவது நுவலுங் காலை
     முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்
     தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
     உண்ணின்றகன்ற உரையொடு பொருந்தி
     நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே.’1

     ‘அதுவே தானும் ஈரிரு வகைத்தே.’2

     ‘ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்
     இனமொழி கிளந்த ஓத்தி னானும்
     பொதுமொழி கிளந்த படலத் தானும்
     மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென்
     றாங்கனை மரபின் இயலும் என்ப.’3

 என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.


 1 தொல். பொ. செய். சூ. 166., 2 தொல். பொ. செய். சூ. 167., 3 தொல். பொ. செய். சூ. 168.