பக்கம் எண் :
 

 20                                    யாப்பருங்கல விருத்தி

     மெய்யாவன, ககரம் முதல் னகரம் ஈறாய்க் கிடந்த பதினெட்டு எழுத்தும் எனக் கொள்க. என்னை?

     ‘ககரம் முலா னகரம ஈறா
     இவையீ ரொன்பதும் மெய்யென மொழிப.’

 என்பது சங்க யாப்பு ஆகலின்.

     ‘மெய் எனினும், ‘உடம்பு’ எனினும் ‘உறுப்பு’ எனினும் ஒக்கும்.

     உயிர்மெய்யாவன, உயிரும் மெய்யும் கூடின எழுத்தெனக் கொள்க. என்னை?

     ‘உயிரும் மெய்யும் புணர்ந்த புணர்ச்சி
     உயிர்மெய் என்றாங் குணர்ந்தனர் கொளலே.’

 எனவும்,

     ‘உயிரும் மெய்யும் ஓராங் கியைந்த
     உயிர்மெய் என்ப உணர்ந்திசி னோரே.’

 எனவும்,

     ‘உயிரின் அளபே அளபென மொழிப.’

 எனவும்,

     உயிரின் அளவுயிர் மெய்யென மொழிப
     வழக்கொடு வரூஉங் காலை யான.’

 எனவும் சொன்னார் தொல்லாசிரியர் எனக் கொள்க.

     பதினெட்டு மெய்மேலும் பன்னிரண்டு உயிரும் ஏற இருநூற்று ஒருபத்தாறு உயிர்மெய்யாம். என்னை?

     ‘உயிரீ ராறே; மெய்மூ வாறே;
     அம்மூ வாறும் உயிரொ டுயிர்ப்ப
     இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே.’

 என்பது பல்காயம் ஆகலின்.

     குற்றெழுத்தாவன, அ, இ, உ, எ, ஒ என்னும் இவ்வைந்தும் எனக் கொள்க. என்னை?