பக்கம் எண் :
 

 200                                   யாப்பருங்கல விருத்தி

[நேரிசை ஆசிரியப்பா]

       ‘இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்
       புலாஅன்1 மறுகிற் சிறுகுடிப் பாக்கத்
       தினமீன் வேட்டுவர் ஞாழலொடு மலையும்?
       மெல்லம் புலம்ப! நெகிழ்ந்தன தோளே;

     5. சேயிறா முகந்த நுரைபிதிர்ப் படுதிரைப்
       பராஅரைப் புன்னை வாங்குசினைத் தொடுத்த
       கானலம் பெருந்துறை நோக்கி இவளை
       கொய்சுவற் புரவிக் கைவண் கோமான்
       நற்றேர்க் குட்டுவன் கழுமலத் தன்ன

     10. அம்மா மேனி தொன்னலம் சிதையத்
       துஞ்சாக் கண்ணன் அலமரும்; நீயே
       கடவுள் மராத்த முண்மிடை குடம்பைச்
       சேவலொடு வதியும் சிறுகரும் பேடை
       இன்னா துயவும் கங்குலும்

     15. நும்மூர் உள்ளுவை; நோகோ யானே.’1

 எனவும் செந்தொடை வந்தவாறு. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

51) இரட்டைத் தொடை

     இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே.

 ‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், இரட்டைத் தொடை ஆமாறு உணர்த் துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : ஓர் அடி முடியும் அளவும் ஒரே சீரே நடப்பது இரட்டைத் தொடை (என்றவாறு)

 என்னை?

     ‘முழுவதும் ஒன்றின் இரட்டை யாகும்’.

 என்றார் பல்காயனார்.

     ‘சீர்முழு தொன்றின் இரட்டை யாகும்’.

 என்றார் நற்றத்தனார்.


  1 அகம் 270. பி - ம் 1 ஊன்புலாஅன் ? மிலையும்.