பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         223

     அறம், பொருள், இன்பம், வீடு என இவற்றைப் பாவி நடத்தலின் ‘பா’
 என்பதூஉம் காரணக்குறி; ஒரு புடையாற் பாவினோடு ஒத்த இனத்தவாய்
 நடத்தலின், ‘பாவினம்’ என்பதூஉம் காரணக்குறி. இவற்றை ‘இடுகுறி’
 எனினும் இழுக்காது.

55) பாக்களின் பெயர் வேறுபாடு

     வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனப்
     பண்பாய்ந் துரைத்த பாநான் காகும்

     ‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், நிறுத்த முறையானே பாக்களது
 பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : வெண்பாவும், ஆசிரியப்பாவும், கலிப்பாவும், வஞ்சிப்
 பாவும் எனத் தத்தம் தன்மையால் தெரிந்து சொல்லப்பட்ட பா, நான்கு
 வகைப்படும் (என்றவாறு).

     ஏகாரம், எண்ணேகாரம், ‘கலியே’ என்ற வழியதால், ஏகாரம் ஒழிந்த
 வழி இல்லையால், அஃது யாங்ஙனம் எண்ணுமோ?’ எனின், ஒரு வழி
 நின்றேயும் ஒழிந்தவற்றைக் கொள்ளும். என்னை?

     ‘எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும்
     எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர்’.1

 என்பது இலக்கணம் ஆகலின், ‘நான்கு’ என்றது என்னை? ‘எண்ணேகாரத்
 தால் எண்ணப்பட்ட நான்கும் என்பது பெறலாம் அன்றோ?’ எனின், ஆம்;
 ஆயினும் அது நூல் நடை எனக் கொள்க. என்னை?

     ‘கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்
     றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே’.2

     ‘ஓதல் காவல் பகைதணி வினையே
     வேந்தற் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்
     றாங்கவ் வாறே அவ்வயிற் பிரிவே’.3

 எனப் பிறரும் சொன்னார் எனக் கொள்க.


  1. தொல். சொல். இடை. 40. 2. தொல். சொல். இடை. 3.
 3. இறையனார் 35.