பக்கம் எண் :
 

 உறுப்பியல்-எழுத்தோத்து                                 23

     குற்றெழுத்து ஒரு மாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை, அளபெடை மூன்று மாத்திரை எனக் கொள்க. என்னை?

     ‘குறிலொரு மாத்திரை, நெடிலிரு மாத்திரை
     அளபெடை மூன்றென் றறியல் வேண்டும்.’

 என்பது பல்காயம் ஆகலின்,

     மாத்திரையாவது, கண் இமைத்தலொடு கைந்நொடித்தல் ஒத்த காலம், என்னை?

     ‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
     நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே.’1

 என்றார் தொல்காப்பியனார்.

     ‘கண்ணிமை கைந்நொடி என்றிவை இரண்டும்
     மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை.’

 என்றார் சங்கயாப்புடையார் ஆகலின்,

     ‘ஒன்றிரண் டொருமூன் றொன்றரை அரைகால்
     என்றனர் பொழுதிவை இமைநொடி அளவே.’

 என்றார் பிறரும்.

     விளி முதலாயினவற்றுள் மூன்று மாத்திரையின் மிக்க பல மாத்திரை யானும் அளபெடுத்து வருமாயினும், அவை செய்யுள்களுக்குப் பெரியதோர் உபகாரம்பட நில்லா ஆகலின், அவற்றிற்கு இலக்கணம் எடுத்து ஓதினாரில்லை எனக் கொள்க.

     வன்மையாவன, க, ச, ட, த, ப, ற என்னும் ஆறும்.     மென்மையாவன, ங, ஞ, ண, ந, ம, ன என்னும் ஆறும்.     இடைமையாவன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறும்.

 என்னை?

     ‘வன்மை என்ப கடச தபற;
     மென்மை என்ப ஙஞண நமன;
     இடைமை என்ப யரல வழள.

 

   1. தொல். எழுத்து. சூ. 7.