ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும்
பாற்படுத்தார் நூலோர் பயின்று’.
எனவும்,
‘குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமோ
டொற்றும் எனவொரு நான்கொழித்துக் - கற்றோர்
உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச்
செயிர்தீர்ந்த செய்யுள் அடிக்கு’.
எனவும்,
‘முற்றுகரந் தானும் முதற்பாவின் ஈற்றடிப்பின்
நிற்றல் சிறுபான்மை நேர்ந்தமையால் - மற்ற
அடிமருங்கின் ஐயிரண்டோ டோரெழுத்து மாதல்
துடிமருங்கின் மெல்லியலாய்! சொல்லு’.
எனவும் (இதன் ஈற்றடி எழுத்துப் பதினொன்று)
‘ஆதியாய் ஆற்றல் உடைத்தாய் வரம்பிகவா
நீதிசால் நூல்பொருந்தி நிற்றலால் - ஓதநீர்
மண்பாவு தொல்சீர் மறைவாணர் பாற்சார்த்தி
வெண்பா உரைத்தார் விரித்து’.
எனவும்,
‘வெண்பாவோர் ஐந்தும் விகற்பத்தாற் பத்தாகித்
தண்பாற் றளைநான்கின் நாற்பதாய்த் - திண்பான்மைச்
செப்பல் ஒருமூன்றின் வந்துறழச் சேர்ந்தபாத்
தப்பாத முந்நாற்ப தாம்’,
எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.
63) வெண் செந்துறை
‘ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், வெண்பாவின் இனம்
ஆமாறு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார், அவற்றுள் இச் சூத்திரம்
வெண் செந்துறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
|