பக்கம் எண் :
 

 272                                   யாப்பருங்கல விருத்தி

[வெண்டாழிசை]

          ‘முழங்குகடல் முகந்த மூரிக் கொண்மூத்
          தழங்குகுரல் முரசிற் றலைசிறந் ததிர்ந்து
          வழங்கினஇவை காணாய் வந்து’.

 இது வஞ்சித்தளையான் வந்த வெண்டாழிசை. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

     ‘வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை’ என்றவற்றை வேறுபடாதே வெள்ளொத்தாழிசையே என்று வழங்கவும் அமையும்.

          ‘தன்பா அடித்தொகை மூன்றாய் இறும்படி
          வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின்
          தண்பா இனங்களிற் றாழிசை யாகும்’.

 என்றார் காக்கைபாடினியார்.

          ‘அடிமூன் றாகி வெண்பாப் போல
          இறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை’.

 என்றார் சிறுகாக்கைபாடினியார்.

          ‘அடிமூன் றாகி வெண்பாப் போல
          இறுவ தாயின் வெள்ளொத் தாழிசை’.

 என்றார் அவிநயனார்.

67) வெண்டுறை

          ‘மூன்றடி முதலா ஏழடி காறும்வந்
          தீற்றடி சிலசில சீர்தப நிற்பினும்
          வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்’.

 இச் சூத்திரம் வெண்டுறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : மூன்று அடி முதலாக ஒன்று தலைச் சிறந்து ஏழடி காறும் வந்து, கடைக்கண் ஓரடியும் பல அடியும் ஒரு சீரும் இரு சீரும் பல சீரும் குறைந்து, அவை எல்லாம் ஓர் இசையாய் வரினும்; முதல் ஓர் இசையாய்ப் பின் ஓர் இசையாய் வரினும், வெண்டுறையாம் (என்றவாறு).