|
87) கலித்தாழிசை
‘அடியெனைத் தாகியும் ஒத்துவந் தளவினிற்
கடையடி மிகுவது கலித்தா ழிசையே’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், கலிப்பா ஆமாறு உணர்த்திக்
கலிப்பாவின் இனம் ஆமாறு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; இச்
சூத்திரம், கலிப்பாவின் இனத்தினுள் ‘தாழிசை ஆமாறு உணர்த்துதல்’
நுதலிற்று.
இதன் பொழிப்பு : அடி சிலவாயும், பலவாயும் வந்து, தத்தமில் ஒத்து,
ஈற்றடிக்கு மிக்கு வருவன எல்லாம் ‘கலியொத்தாழிசை’ என்றும்
‘கலித்தாழிசை’ என்றும் வழங்கப்படும் (என்றவாறு).
‘அடியெனைத் தாகியும் ஒத்துக் கடையடி மிகுவது கலித்தா ழிசையே’
என்னாது, ‘வந்து’ என்றும், ‘அளவினில்’ என்றும் மிகுத்துச் சொல்ல
வேண்டியது என்னை?
‘வந்து’ என்று மிகுத்துச் சொல்லியதாவது, இரண்டடியினவாய் ஈற்றடி
மிக்கு வருவனவும், ஈற்றடி மிக்கு ஏனையடி தம்முள் ஒவ்வாது அருகி
வருவனவும் உள ஒருசார்த் தாழிசை என்பது அறிவித்தற்கு எனக் கொள்க.
‘அளவினில்’ என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஒரு பொருண்
மேல் மூன்றாய் வருவனவற்றைக் ‘கலியொத்தாழிசை’ என்றும், ஒன்றாயும்
இரண்டாயும், மூன்றின் மிக்கும் மூன்றாய்ப் பொருள் வேறாயும்
வருவனவற்றைக் ‘கலித்தாழிசை’ என்றும் பெயர் வேறுபடுத்துச்
சொல்லுவாரும் உளர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு எனக்
கொள்க.
‘கலித்தாழிசையே’ என்று ஏகார விதப்புச் சொல்ல வேண்டியது
என்னை?
ஈற்றடி மிக்கு ஏனையடி ஒத்து வருவனவற்றை எல்லாம் ‘சிறப்புடைக்
கலித்தாழிசை’ என்றும், ஒவ்வாது வருவனவற்றை ‘சிறப்பில் கலித்தாழிசை’
என்றும், ஈரடியானும் ஈற்றடி மிக்கு வருவனவும் ‘சிறப்பில் கலித்தாழிசை’
என்றும் சொல்லுவார் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு
வேண்டப்பட்டது எனக் கொள்க.
|