|
இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறியாய் வந்தமையால்,
வஞ்சி மண்டிலத் துறை.
பிறவும் வந்த வழிக் கண்டு கொள்க. பிறரும் இவ்வாறே சொன்னார்.
என்னை?
‘ஒன்றினை நான்மை உடைத்தாய்க் குறளடி
வந்தன வஞ்சித் துறையெனல் ஆகும்’.
‘குறளடி நான்கின் கூடின வாயின்
முறைமையின் அவ்வகை மூன்றிணைந் தொன்றி
வருவன வஞ்சித் தாழிசை ஆகும்’.
என்றார் காக்கைபாடினியார்.
‘எஞ்சா இருசீர் நாலடி மூன்றெனில்
வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே’.
என்றார் சிறுகாக்கைபாடினியார்.
‘இருசீர் நாலடி மூன்றிணைந் திறுவது
வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே’.
என்றார் அவிநயனார்.
‘இருசீர் நாலடி மூன்றிணைந் தொன்றி
வருவது வஞ்சித் தாழிசை; தனிநின்
றொருபொருள் முடிந்தது துறையென மொழிப’.
என்றார் மயேச்சுரர்.
92) வஞ்சி விருத்தம்
‘சிந்தடி நான்காய் வருவது வஞ்சிய
தெஞ்சா விருத்தம் என்மனார் புலவர்’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், வஞ்சி விருத்தம் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : முச்சீர் அடி நான்கு உடைத்தாய் வரும் செய்யுள்
வஞ்சி விருத்தம் என்பர் புலவர் (என்றவாறு).
‘சிந்தடி நான்காய் வருவது
வஞ்சியது விருத்தம் என்மனார் புலவர்’.
என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும்; ‘எஞ்சா’ என்று மிகுத்துச்
சொல்ல வேண்டியது என்னை?
|