பக்கம் எண் :
 

 382                                  யாப்பருங்கல விருத்தி

     ‘அந்தத்திற் பாவிற் கினமாய ஆறினையும்
     பந்தம் பதினான்கி னாற்பாப்ப - வந்தன
     எண்பத்து நான்காம் இனியவற்றின் மிக்கனவும்
     பண்புற்றுப் பார்த்துக் கொளல்’.

 எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க

     வஞ்சிப்பாவும் அதன் இனமும் முடிந்தன.

93) புறநடை

     ‘மிக்கும் குறைந்தும் வரினும் ஒருபுடை
     ஒப்புமை நோக்கி ஒழிந்தவும் கொளலே’.

     ‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், மேற்சொல்லப்பட்ட பாக்கட் கெல்லாம் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : (மேற்சீரும் அடியும் வரையறுக்கப் பட்ட பாவும் பாவினமும் சொன்ன பெற்றியிற் றிரிந்து) மிக்கும் குறைந்தும் வந்தாலும், அவற்றை ஒருபுடை ஒப்புமை நோக்கி, ஒழிந்த செய்யுட்களையும் அவற்றின் பாற்படுத்து வழங்கப்படும் (என்றவாறு).

     வரலாறு :

[கலி விருத்தம்]

      ‘கோழியும் கூனின; குக்கில் அழைத்தன; 1
      தாழியுள் நீலத் தடங்கணீர்! போதுமினோ;
      ஆழிசூழ் வையத் தறிவன் அடியேத்திக்2
      கூழை நனையக் குடைதும் குளிர்புனல்
      ஊழியும் மன்னுவாம் என்றேலோர் எம்பாவாய்!’

     ‘நாற்சீர் நாலடியால் வருவது கலி விருத்தம்’ என்று வரையறுத்துச் சொன்னார். இஃது ஐந்தடியால் வந்ததாயினும், ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலி விருத்தத்தின் பாற்படுத்து வழங்கப்படும். இதனைத் தரவுக் கொச்சகம் என்பாரும் உளர். இஃது அவிநயனார் காட்டிய பாட்டு.


   பி - ம். 1 குரலியம்பும், குரல்காட்டும் 2 அண்ணல் அடிபோற்றி