பக்கம் எண் :
 

 610                                   யாப்பருங்கல விருத்தி

     ஆரிடமாவது, ஏறும் ஆவும் கொணர்ந்து நிறீஇ, அவற்றின் முன்னர்க் கைக்கு நீர் பெய்து கொடுத்தல்.

     என்னை?

[நேரிசை வெண்பா]

     ‘இற்குலத்தோ டொப்பானுக் கொப்பான் இமிலேறாப்
     பொற்குளம்பிற் பொற்கோட்ட வாப்புனைந்து - முற்படுத்து
     வாரிடம்பே ராமுலையை வாழ்க்கைக்கண் வைப்பதுரை
     ஆரிடம் பேராம் அதற்கு.”

 என்றாராகலின்.

     தெய்வமாவது, வேள்விக் களத்துத் தீப்பாரித்துத் தீ முன்னர் வேள்வி ஆசிரியர்க்குக் கைக்கு நீர் பெய்து கொடுத்தல்.

     என்னை?

[நேரிசை வெண்பா]

     ‘மெய்ப்பாலைப் பெண்டன்மை எய்தியபின் மெல்லியலை
     ஒப்ப உணர்ந்த பொழுதுண்டல் - ஒப்பாற்கு
     நெற்தயங்கு தீமுன்னர் நேரிழையை ஈவதே
     தெய்வப்பே ராகும் தெளிந்து.’

 என்றாராகலின்.

 இவை நான்கும் அந்தணர்க்கு உரிய.

     அசுரமாவது, ‘இன்னது செய்தார்க்கு இவள் உரியள்,’ என்ற விடத்து, அன்னது செய்து எய்துவது அவை வில்லேற்றுதல், திரிபன்றி எய்தல், கொல் ஏறு கோடல் முதலிய.

     என்னை?

[நேரிசை வெண்பா]

     வில்லேற்றல் வேள்வியைக் காத்தல் மிகுவலிக்
     கொல்லேற் றியல்குழையைக் கோடலென்- றெல்லாம்
     அரியனசெய் தெய்தினான் ஆயின் அசுரம்;
     அரியவாம் அந்த மணம்.’