பக்கம் எண் :
 

 உறுப்பியல் - சீர் ஓத்து                                   71

     ‘நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
  நெஞ்சத் தவலம் இலர்.’1

 எனவும் இவற்றுள் நேரசையும் நிரையசையும் வந்தவாறு காண்க. என்னை?

     ‘இசைநிலை நிறைய நிற்குவ வாயின்
  அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே’2

 என்றார் தொல்காப்பியனார்.

     ‘நேர்நிரை வரினே சீர்நிலை எய்தலும்
  பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி.’3

 என்றார் அவிநயனார்.

     ‘நேரும் நிரையும் சீராய் வருதலும்
  சீரும் தளையும் சிதைவுழிக் கொளலும்
  யாவரும் உணர்வர் யாவகைப் பாவினும்.’4

 என்றார் மயேச்சுரர்.

15) முன்னே கூறப்பட்ட சீர்கள் செய்யுளுள் நிற்கும் முறை

     விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி
  மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே.

 ‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், அச்சீர் செய்யுளகத்து நிற்கும் முறைமை உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள் : விரவியும் - (இயற்சீரும் உரிச்சீரும் செய்யுளகத்து) மயங்கியும், அருகியும் - (பொதுச்சீர்) அருகியும், வேறும் - (இயற்சீரும் உரிச் சீரும்) வேறு வேறே ஆயும் (செய்யுளகத்து வரும்); ஒரோவழி மருவியும் - நிரையீறாகிய நாலசைப் பொதுச் சீர் எட்டும் வஞ்சிப்பாவினுள்ளே வரும்; பெறாதும் - வஞ்சியுரிச்சீர் வெண்பாவினுள் வரப்பெறாது (ம்),1 வழங்குமன் அவையே - அவ்வாற்றால் நடைபெறும் முன்கூறப்பட்ட சீர்கள் (என்றவாறு)


  1. குறள். 1072 2. தொல். பொ. செய். சூ. 27, 3,4 யா. வி. சூ. 91 உரைமேற்.

  பி - ம்.: 1 இதன்பின் ‘நேரீராகிய தேமா புளிமா என்னும் இரண்டு இயற்சீரும் ஒத்தாழிசைக் கலிப்பாவிலும், தரவு தாழிசைகளுள்ளும் வரப்பெறா; வஞ்சியுள்ளும் இறுதிக் கண் பெரும்பான்மையும் வரப்பெறா என்னுந்’ தொடர்கள் பழைய பதிப்பிற் காணப்படுகின்றன; எனினும் கிடைத்த ஏடுகளிற் காணப்படவில்லை.