என்று சொல்லப்படுவான் . பாண்டியனுடைய சுறவேற்றுக் கொடியை அழித்துச் சேரனுடைய விற்கொடியைச் சிதைத்து எல்லா நாட்டையும் கைக்கொண்டு தன்னோடு ஒப்பார் உலகத்தில் இல்லையெனச் சக்கரம் செலுத்திய சோழனைத் தொழுதற்கு ஒழிந்தார் இல்லையென மாயனோடு ஒப்பித்துச் சொல்லினும் , சோழன் வஞ்சியான் எ- று.
மாறு - பகைஞரும் , உவமையும் . இறுத்தல் - வளைத்தல் . எஞ்சினார் - ஒழிந்தார் . வஞ்சி - கருவூர் . நீர்நாடு - காவிரி நாடு . வஞ்சியான் - வஞ்சி என்னும் ஊருடையான் . ' ஏற்றுக்கொடி ' என்றதற்குக் காடவர்கோன் கொடி ' என்று பொருள் கூறுவாரு முளர்.
' ஏது வேற்றுமை ' என மற்றுமொரு வகையும் காணப்படும் . பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வி-ரை:: வேற்றுமையணி சிலேடை அணியோடு கூடிவரின் அது சிலேடை வேற்றுமையாம்.
இப்பாடற்கண் கூறப்படும் பொருள் சோழனும் திருமாலும் ஆவர் . முன்னிரண்டடிகளில் இருவர்க்கும் உள்ள ஒற்றுமையைக் கூறிப் , பின்னிரண்டடிகளில் திருமால் மாயன் (அதாவது வஞ்சிப்பவன் ) என்றும், வேற்றுமை கூறப் பட்டிருத்தலின் , இது வேற்றுமையணி ஆயிற்று . மாயன் என்னும் சொல் கரியன் , வஞ்சனையுடையவன் என்ற இருபொருளுக்கும் , வஞ்சியான் என்னும் சொல் வஞ்சனையில்லாதவன் , வஞ்சி என்னும் ஊரை உடையவன் என்ற இரு பொருளுக்கும் ஏற்ப இருத்தலின் , இது சிலேடையணியும் ஆயிற்று.
வஞ்சி சேரநாட்டகத்ததாயினும் , சோழன்தன் பேராற்றலால் அதுவும் அவன் ஆணைக்கு உட்படுவதாயிற்று.
9. விபாவனையணி
50. உலகறி காரணம் ஓழித்தொன் றுரைப்புழி
வேறொரு காரண மியல்பு குறிப்பின்
வெளிப்பட வுரைப்பது விபாவனை யாகும்.
எ-ன் , நிறுத்த முறையானே விபாவனை யென்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) ; ஒன்றன் வினை உரைக்குங்கால் அவ்வினைக்குப் பலரும் அறிய வருங் காரணம் ஒழித்துப், பிறிதொரு காரணமாக இயல்பாகக் , குறிப்பின் வெளிப்பட உரைப்பது விபாவனை என்னும் அலங்காரமாம் எ -று.
அவற்றுள்,
1. 1அயற்காரண விபாவனை
எ - டு: தீயின்றி வேந்தமியோர் சிந்தை செழுந்தேறல்
வாயின்றி மஞ்ஞை மகிழ்தூங்கும் - வாயிலார்
இன்றிச் சிலர்ஊடல் தீர்ந்தார் 2இகலின்றிக்
கன்றிச் சிலைவளைக்கு கார் '
1. 'இயல்புகாரண விபாவனை ' என்பதும் பாடம்.
2. 'தமரின்றி ' என்பதும் பாடம்.