பக்கம் எண் :
 
236தண்டியலங்காரம்

இ - ள் :மலைப்பக்கங்களிலே சஞ்சரிக்கின்ற சிங்கம், மதயானையினது கோட்டைப் புயத்திலே தாங்கி வருந்தும் இயல்பினை யுடையதாகிய காடு, எவரும் செல்லற்கு அரிதாம் தன்மை யுடையதாம்; ஆதலின், ஐயனே! அக்காட்டில் நள்ளிரவில் வருதலை ஒழிவாயாக; அங்ஙனம்வரின் பெரிதும் பிழையாகும் எ - று.

'யாளி யானைக்கோடு புயத்துண்டு' என்றது, யானை மதங்கொண்டு சிங்கத்தையும் பாய, அதன்புயத்தில் தந்தம் முறிந்திருக்க அதனோடு சிங்கம் வருந்தித் திரியும் என்றபடி, இங்ஙனம் யானை சிங்கத்தையும் பாயும் எனவே, காட்டின் கொடுமை மிகுதிப்பாடு விளங்கும். இது ஆறு பார்த்துற்ற அச்சங் கூறல். புயம் - புடை.

இதனுள், 'காடரிதாம்' எனற்பாலது 'காடு அரிதாம்' என்று, அச்சொற் கூடாது அறுத்திசைத்து யதிவழு ஆயிற்று.

(22)

மேலதற்கோர் சிறப்புவிதி

113.வகையுளி யுரைப்புழி வரைவின் றதுவே.

எ - ன்,வகையுளி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் :அச்சீர் அறற்பாலவழி அறாது நின்ற தெனினும், வகையுளி சேர்த்துக் கொள்ளலாமெனில் குற்றமன்று எ - று.

எ - டு :

'மேவிவாழ் வார்மே லிருணீக்கி யாருமலர்த்
தேவிநீங் காள்செம்பொற் றோளிணைகள் - கோவினணி
சென்னிவிடா மாலினடி வேலினுதி நீலநிறக்
கன்னிவிடா ளீகைவிடா கை'

இ - ள் :தான் விரும்பி வாழ்வாரிடத்தே, வறுமை என்னும் இருளை நீக்கி, ஐசுவரியம் என்னும் தன்னுடைய பிரகாசத்தைப் பரப்பிப் பொருந்துகின்ற, செந்தாமரை மலரில் வாசம் செய்யும் திருமகள், அரசனுடைய செம்பொன் போன்ற தோள்களை விட்டு நீங்காள்; அவனது அழகிய சிரம் திருமாலின் அடியைவிட்டு நீங்காது; நீலநிறம் பொருந்திய சயமடந்தை அவனுடைய வேலின் முனையை விட்டு நீங்காள்; அவன் கை, ஈகையை விட மாட்டாது எ - று.

இதனுள், வகையுளி சேர்த்துக்கொள்ளக் குற்றமன்றாயிற்று. வகையுளியாவது : - அந்தந்தச் சொன்முடிபே சீர்முடிவாகத் தளைகொள்ளாமல் வேண்டியவிடத்துச் சீர்முடிவு செய்து தளைகொள்ளுதல்.

(23)

(1) செய்யுள்வழு

114.

செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோ(டு)

எய்தல் இல்லா இயல்பிற் றாகும்.

எ - ன் , நிறுத்த முறையானே செய்யுள் வழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : செய்யுள் வழுவாவது யாப்பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினை யுடைத்து எ - று.