பக்கம் எண் :
 
சொல்லணியியல்243

மதயானையைச் செலுத்தி, பகைவர்களைப் பொடியாக்கி, இந்தப் பூமி முழுவதையும் நீண்ட தனது கொற்றக்குடை நிழலின் கண்ணே தங்கும்படி செய்தான் எ - று.

தூர்த்தல் - வேறு பொருள்களை இட்டு நிரப்பி மேடாக்குதல்.

இதனுள், ஒரு நில வேந்தனை எழுகடலும் தூர்த்தானாகவும், ஆகாயத்தே தன் யானையைச் செலுத்திப் பகைவரை வென்றானாகவும், உலக ஒழுக்கோடு மாறுபடக் கூறினமையின், உலக மலைவு ஆயிற்று.

(31)

(5) நியாய மலைவு

122. நியாயம் என்பது நெறியுறக் கிளக்கின்

அளவையில் தெளிக்கும் விளைபொருள் திறமே

எ - ன், நியாயம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : நியாயம் என்பதனை இலக்கணவகையால் கூறுங்கால், காண்டல் முதலிய அளவையால் பொருள் விளையும் திறத்தைத் தெளிவிப்பது எ - று.

அது, அறுவகைப்பட்ட சமயத்தோரும் உலகத்தில் பொருள்களது தோற்றமும், நிலையும், அழிவும் இன்ன வகைய என்று கூறுதல்.

அவற்றின் மலைவாவது, அவற்றை அவ்வவர் கூறியவாறு கூறாது மாறுபடக் கூறல்.

எ - டு :

'ஆய பொருள்கள் கணந்தோ றழியுமெனத்

தூய அசோகின் முனியுரைத்த(து) - ஆய்வன்றே

காதலர் நீங்க எழுங்காம வெங்கனல்வாய்

மாதர் உயிர் தாங்கு மாறு'

இ - ள் : உலகத்தில் தோன்றிய பொருள்கள் எல்லாம், ஒவ்வொரு கணத்திலும் அழிந்துபோம் என்று, பரிசுத்தமாகிய அசோகமரத்தின் அடியில் எழுந்தருளி இருக்கின்ற முனிவனாகிய அருகன் சொன்னது, நல்ல ஆராய்ச்சியை உடையதன்று; ஏனெனில், தம் காதலர் பிரிய, அதனால் உண்டாகின்ற வெப்பமாகிய ஆசைக் கனலினிடத்தே அகப்பட்டு மாதர் உயிரைத் தாங்கியிருக்கும் வீரத்தால் எ - று.

இதனுள், தோன்றும் பொருள்கள் எல்லாம் கணந்தோறும் அழியும் எனப் போதிமுனி உரைத்தான் எனற்பாலதனை, அசோகின்முனி உரைத்தான் என்றமையால், நியாய மலைவு ஆயிற்று.

போதிமுனி - புத்தன், அசோகின்முனி - அருகன். பிறவு மன்ன.

(வி - ரை) அறுவகைச் சமயங்கள் :- உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்பன. காண்டல் முதலிய அளவைகளாவன :- காட்சி, அனுமானம் உரை, உவமை, அருத்தாபத்தி, இன்மை என்பன. இவ்வளவைகளின் இலக்கணத்தைச் சிவஞான சித்தியாரால் நன்கறியலாம்.

(32)