பக்கம் எண் :

74தொல்காப்பியம் - உரைவளம்
 

சிறப்பாவன   : வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் இல்லறம் நிகழ்த்தலும் பிரிவாற்றுதலும் பிறவுமாம்.
இன்னவிடத்தும் இன்னவிடத்தும்  நிகழுங்  கூற்றுக்களை  வாயிலெதிர்  கூறுங்கூற்றோடே தொகுத்துப்
பண்ணுதற்கமைந்த  பகுதியுடையவாகிய  முப்பத்து  மூன்று  துறையுந் தலைவன் கண் நிகழ்வன என்று
முடிக்க.  எடுத்துரைப்பினுந் தந்நிலை கிளப்பினும் அக்கூற்றுக்களையும் வாயிலெதிரொடு தொகைஇயென
முடிக்க.
  

இவற்றுட்  பண்ணிக்கொள்ளும்  பகுதியாவன.  யாம்   மறைந்து  சென்று  இவனைக்  கண்ணைப்
புதைத்தால் தலைநின்றொழுகும்  பரத்தையர்  பெயர்  கூறுவனென்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல்
தலைவியாதல் சென்று கண் புதைத்துழித் தலைவன் கூறுவனவும், பள்ளியிடத்து வந்திருந்து கூறுவனவும்
இவள் ஊடற்குக்  காரணம்  என்னென்று  தோழி  வினாயவழிக் கூறுவனவும்
பிரிந்த காலத்து இவளை
மறந்தவாறென்னென்ற தோழிக்குக் கூறுவனவும் பிறவுமாம்.
  

உதாரணம்
  

“சிலம்புகமழ் காந்தணறுங்குலையன்ன
நலம்பெறு கையினெங்கண்புதைத்தோயே
பாயலின் றுணையாகிய பணைத்தோட்
டோகை மாட்சியமடந்தை
நீயல துளரோ வென்னெஞ்சமர்ந்தோரே”
1
  

(ஐங்-293)
  

“தாழிருடுமிய மின்னித் தண்ணென
வீமுறையினிய சிதறி யூழிற்
கடிப்பிகு முரசின் முழங்கியிடித்திடத்துப்
பெய்கினி வாழியோ பெருவான்யாமே
செய்வினை முடித்த செம்மலுள்ளமொ
டிவளின் மேவினமாகிக் குவளைக்
குறுந்தாணாண்மலர்நாறு
நறுமென் கூந்தன் மெல்லணையேமே”
2
  

(குறுந்-270)


1. பொருள் :மலையெங்கும் மணக்கும் காந்தளினது கொத்துப்போலும் கைகளினால் என் கண்ணைப்
புதைத்தாய்.  துயிலத்  துணையாகும்  பருத்த  தோளும்  மயில் சாயலுமுடைய  மடந்தையே என் 
நெஞ்சத்து அமர்ந்தோர் நீயலது வேறு உளரோ-இல்லை.
  

2. பொருள் :பக்கம் 38ல் காண்க.