1. பொருள் : தோழீ! காதலர், யானைமருப்பின் இரும்புப் பூண்போலவுள்ள முலைக் காம்புகள் தம் மார்பகத்தோடு முயங்குதலைத் தடுக்காமல் விடுக என்று சொல்லி யான் விடுவீராக எனக்கூறவும் கேளாதவராய்ப் புல்லி முலைகளைப் பாராட்டிய காலங்களும் உள. இன்றோ புதல்வனை வேறிடம் பாராதபடித் தடுக்கும் பாலால் சரிந்தமென்முலைகள் அவர் மார்பில் பருக்கும்படி அவரை முயங்க வேண்டினேன்; ஆனால் அவர் தம் மார்பில் பால்படுதற்கு அஞ்சினார். அப்போது அவரது அணைத்தகைகள் நெகிழ்தலைக் கண்டு செவிலியின் கையில் இருந்த புதல்வனைக் காட்டியாம் இச் செல்வனுக்குப் பொருந்தினேம். நீயிர் பரத்தையர்க்குப் பொருந்தினீர் என்று கூறிப் புதல்வன் பக்கம் சென்றேன். அது கண்டு தலைவனும் யாமும் புதல்வனிடம் அன்புடையேம் என்று கூறிவந்து என் முதுகை அணைத்தனன். அப்போது மழையை ஏற்ற உழுது பதப்பட்ட வயல் மண்போல என் நெஞ்சம் நெகிழ்ந்து கலங்கி அவன்பால் சென்ற அறிவினேனாயினேன். அப்படிப்பட்ட எனக்கு, முள்ளிச் செடியின் குலைகழன்று வீழும் மலர்களை விழவுகொள்ளும் மகளிர் கூட்டுகின்ற அழகிய வளமிக்க ஊரனைப் புலத்தலும் கூடுவதோ? |