உள்ளம் மகிழ யாம் ஆடாநிற்போம்; அங்ஙனம் கூறுவாரைப் பெற்றிலே மாதலால் யாங்கொண்ட அவா வீணே கழிந்தது; எ - று.
(வி - ம்.) ஓரை - பஞ்சாய்ப்பாவை கொண்டு மகளிராடும் விளையாட்டு. உந்தி - யாறு. ஆக்கம் - செல்வம். குன்றம்முகில் மழையிறுத்தன்று என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேலேற்றிக் கூறப்பட்டது. மன்-கழிவுப்பொருளது. எல்லுமிழ்ந்து மின்னியெனக் கூட்டுக. நறுமலருடனே பொங்கி வருமெனக் கூட்டுக.
இளையோர் ஆடவரெனக் கொண்டு இளையோரில்லாதவிடத்திருத்தல் அறனுமன்று என்றவழி தங்கருத்துத் தலைவி காதலனை முயங்க வேண்டினும் பாதுகாப்பா ரில்லாதவிடமென்று அன்னை கொள்ளுதற் பொருட்டெனவுமாம்.
வரைவுநீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமை மறையுமென்னுங் கருத்தால், அவர் மலையினின்று வருகின்ற நீரினாடுகமென்றாள். இற்செறித்திருத்த லென்றதனால் செறிப்பறிவுறுத்தியதாயிற்று.
மெய்ப்பாடு : அழுகை. பயன் - தலைவியை யாற்றுவித்தல்.
(பெரு - ரை.) இன்றிரவு அவர் குன்றத்தே மழை பெய்தலான் நாளைப் பகற்பொழுதிலே அன்னை விடுவாளாயின் நெஞ்சுண ஆடுகம் என்பது கருத்து. தலைவி தலைவன் மலையிடை நின்றும் வரும் ஆற்றிலாடுதற்குப் பெரிதும் அவாவுவள் என்பதனை,
| "எற்றொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைக் |
| கற்றீண்டி வந்த புதுப்புனல் |
| கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் |
| உற்றாடின் நோந்தோழி நெஞ்சன்றே" |
என்றற் றொடக்கத்துச் சிலப்பதிகாரச் செய்யுள்களானும் (குன்றக்குரவை - 4: 13) உணர்க.
விடுநள்மன் கொல்லோ என்பதன்கண் உள்ள மன்னைப் பிரித்து நெஞ்சுண ஆடுகம்மன் எனக் கூட்டுக. மன் ஈண்டு ஒழியிசை. அதன் பொருள் "அங்ஙனம் கூறுவாரைப் பெற்றிலேமாதலால் யாங்கொண்ட அவா வீணே கழிந்தது" என்பதாம்.
இனி ஆசிரியர் நக்சினார்க்கினியர் இச்செய்யுளை, "இது வரைவு நீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும்? இங்ஙனம் கூறுவாரைப் பெறின் எனக் கூறி வற்புறுத்தது" என வேறோர் துறையாகக் கொண்டு 'என்புநெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்புதலையடுத்த வன்புறைக் கண்ணும்" என்னும் விதிக்கு எடுத்துக்காட்டுவர், இதற்குப் பயன் தோழி தலைவியை ஆற்றுவித்தல், முன்னதற்குப் பயன் வரைவு கடாதல் என்று நுண்ணிதின் வேற்றுமை யுணர்க.
இச்செய்யுட்கு உரையாசிரியர் பயன் தலைவியை யாற்றுவித்தல் என்பது, அவர் கொண்ட துறைக்கு ஒவ்வாமையுமுணர்க.
(68)