(து - ம்.) என்பது, வினைவயிற் பிரிந்துபோன தலைவன் குறித்த பருவத்து வாராமையால் அதனை யாற்றாத தலைவி மாலைப்பொழுது வருதலும் மிகத் துன்புற்று இம்மாலைப்பொழுது அவர் சென்றநாட்டும் இத் தன்மையதாய் வருத்திப்புகுமாயின் அவர் தாமெடுத்துக்கொண்ட வினைமேற்செல்லும் பற்றுள்ளம் விடுத்து இன்னே வருகுவர்; அப்படியில்லைப் போலுமென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்" (தொல்-கற்- 6) என்னும் நூற்பாவினுள் ஆவயின் வரும் பல்வேறு நிலையினும் என்பதன்கண் அமைத்து, அவர் சென்ற நாட்டில் இஃது இன்று கொல் என்று வருந்தினாள் என்க,
| பல்கதிர் மண்டிலம் பகல்செய் தாற்றிச் |
| சேயுயர் பெருவரைச் சென்றவண் மறையப் |
| பறவை பார்ப்புவயின் அடையப் புறவின் |
| மாயெருத்து இரலை மடப்பிணை தழுவ |
5 | முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் |
| தோன்றி தோன்றுபு புதல்விளக் குறாஅ |
| மதர்வை நல்லான் மாசில் தெண்மணி |
| கொடுங்கோற் கோவலர் குழலோ டொன்றி |
| ஐதுவந் திசைக்கும் அருளில் மாலை |
10 | ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
| இனைய ஆகித் தோன்றின் |
| வினைவலித் தமைதல் ஆற்றலர் மன்னே. |
(சொ - ள்.) பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிச் சேய் உயர் பெருவரை சென்று அவண் மறைய - பல கதிர்களையுடைய ஆதித்த மண்டிலம் பகற்பொழுதைச் செய்து முடித்து மிகவுயர்ந்த பெரிய அத்தமயமலையிற்சென்று அங்கே மறையவும்; பறவை பார்ப்பு வயின் அடைய - பறவைகள் தம் பிள்ளைகளிருக்கும் கூட்டிற் சென்று தங்கியிருப்பவும்; புறவின் மா எருத்து இரலை மடப்பிணை தழுவ - காட்டின் கண்ணே கரிய பிடரியையுடைய கலைமான் இளைமையையுடைய தன் பெண்மானைத் தழுவியிருப்பவும்; முல்லை முகை வாய் திறப்ப - முல்லையரும்புகள் மலரவும்; பல்வயின் புதல் தோன்றி தோன்றுபு விளக்கு உறாஅ - பலவிடங்களிலுள்ள புதர் தோறும் காந்தள் தழைத்துத் தன் மலராகிய விளக்கேந்தி நிற்பவும்; மதர்வை நல் ஆன் மாசு