(து - ம்.) என்பது, இருவகைக் குறியானும் வந்தொழுகுந் தலைமகன் இடையீடுபட்டு வாராதொழியக் கண்ட தலைமகள், வரைதல் விருப்பினளாய் வேட்கை பெரிதுஞ் சிறப்பச் சிந்தித்து நாரையை நோக்கிச் "சிறிய வெளிய நாராய், தலைவர்க்கு யான்படுந் துன்பத்தைச் செப்பாதோய், எம்மூரின் இரையை அருந்தியபின் அவரூர்க்கேனுஞ்செல்; அதனையு மறப்பையோ' வென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித்தோழிக்கு 'நினைத்தல் சான்ற அருமறை யுயிர்த்தலும்" (தொல்-கள- 20) என்னும் விதிகொள்க. இது தோழி கேட்ப நாரைக்குக் கூறுவாள் போற் கூறியது என்க.
| சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே |
| துறைபோகு அறுவைத் தூமடி அன்ன |
| நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே |
| எம்மூர் வந்தெம் ஒண்டுறை துழைஇச் |
5 | சினைக்கெளிற் 1 றார்கையை அவரூர்ப் பெயர்தி |
| அனையஅன் பினையோ பெருமற வியையோ |
| ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்குங் |
| கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் |
| இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே. |
(சொ - ள்.) சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங் குருகே துறை போகு அறுவைத் தூமடி அன்ன நிறம் கிளர்தூவிச் சிறு வெள்ளாங்குருகே-சிறிய வெளிய குருகே ! சிறிய வெளிய குருகே ! நீர்த்துறையிலே கழுவிய வெள்ளாடையின் மாசற்ற மடிபோன்ற நன்னிறம் விளங்கிய சிறகினையுடைய சிறிய வெளிய குருகே !; ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும் கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு - அவ்விடத்துள்ள இனிய புனல் இவ்வூரின்கண்ணே வந்து பரக்கின்ற கழனியையுடைய நல்ல ஊரினையுடைய என் காதலர் பாலேகி; என் இழை நெகிழ் பருவரல் செப்பாதோய் - என்னுடைய கலன்கள் கழலுகின்ற துன்பத்தை இதுகாறுஞ் சொல்லாதோய்; எம் ஊர் வந்து எம் ஒண் துறைத் துழைஇ சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி - நீ எம்மூரினையடைந்து எமது ஒள்ளிய பொய்கையினது துறையிலே புகுந்து துழாவிச் சினையுள்ள கெளிற்றுமீனைத் தின்றனையாகி அப்பால் அவருடைய ஊர்க்குச் செல்வாயாக; அனைய அன்பினைமோ பெருமறவியையோ-எம்மூர் வந்துண்ட நன்றி மறவாமல் இனி அவரிடம் கூறுதற்குத்தக்க அனைய அன்பினையுடையையோ ? அன்றேல் பெருமறதியையோ ? ஒன்றினை ஆராய்ந்து கூறிக்காண் !; எ - று.