பக்கம் எண் :


131


    திணை : குறிஞ்சி.

    துறை : இது, சேட்படுக்கப்பட்டதுகேட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழிகேட்பச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைவி கிடைத்தற்கரியளாமென அவளைச் சேட்படுத்திக் கூறுந்தோழி நகையாடிக் கூறக்கண்ட தலைமகன் அந்நகைபொறாதுஅவளை நோக்கி இது தகாது கண்டாய்: அத்தலைமகளுடைய நோக்கம் பட்ட என்னுள்ளமுய்யுமாறு நகைசெய்யாதுரைப்பாய்: இன்றேல் எனனெஞ்சுடையுமெனப் புலம்பிக் கூறா நிற்பது.

    (இ - ம்.) இதற்குப் "பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்" (தொல்-கற்- 12 ) என்னும் நூற்பாவின்கண் வரும் "அன்புற்று நகினும்" என்னும் விதிகொள்க.

    
நயனின் மையிற் பயனிது வென்னாது 
    
பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப் 
    
பாம்புயி ரணங்கி யாங்கும் ஈங்கிது 
    
தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது 
5
உரைமதி உடையுமென் உள்ளஞ் சாரல் 
    
கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் 
    
பச்சூன் பெய்த பகழி போலச் 
    
சேயரி பரந்த ஆயிழை மழைக்கண் 
    
உறாஅ நோக்கம் உற்றஎன் 
10
பைதல் நெஞ்சம் உய்யு மாறே. 

    (சொ - ள்.) குறுமகள் வாழி - இளமகளே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக !; நயன் இன்மையின் இது பயன் என்னாது - உன்னிடத்திற் சிறிதும் நன்மை யில்லாமையால் இதுதான் பயன் என்று கருதாமல்; பூ பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை பாம்பு உயிர் அணங்கி ஆங்கு - பொலிவு பெற்ற புள்ளிகள் அமைந்த அழல் போன்ற நஞ்சை உமிழ்கின்ற அகன்ற படத்தையுடைய பாம்பு உயிர்களைக் கொல்லும் பொருட்டுக் கடித்து வருத்தினாற்போலும்; ஈங்கு இது தகாஅது இங்கு நகைத்துரைப்பதாகிய இது தகுதியுடையதொன்றன்று சாரல் கொடுவில் கானவன் கோட்டு மா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சே அரி பரந்த ஆயிழை மழைக் கண் மலைச் சாரலின்கண்ணே வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கோட்டினையுடைய பன்றியை எய்து கொன்று, அதன் பசிய தசையிற் பாய்ச்சியதனாலே சிவந்த அம்பைப் போலச் செவ்வரி பரந்த