தன் விறலைத் தெரிப்பான் அஞ்சுவழியஞ்சா தென்றான். நெடுந்தூரம் போந்தனமாதலி னினித் தமர்தொடர்ந்து வருவர்கொலென்னும் அச்சமில்லை யெனக் கொண்டு அசைவழி யசைஇ யென்றான். புன்னை மலர்ப் பரப்பி னியங்கிய அடிகளாதலிற் கல்லினிடத்துச் சிவந்தவே யென்றிரங்கி வருந்தாதே கென்றான். இது நெய்தலிற்களவு.
மெய்ப்பாடு - உவகை. பயன் - அயர்வகற்றல்.
(பெரு - ரை.) உலவையங்காட்டு என்புழி உலவை என்பது பாலை நிலக் கருப்பொருளாகிய ஒருவகை மரம். இதனை, "ஓமையும் உழிஞ்சிலும் உலவையும் உகாயும்" (பெருங்- 1 - 52 : 57 ) எனவரும் பெருங்கதையானும் உணர்க. எனவே, உலவை மரமிக்க காடு என்பதே பொருளாகக் கொள்க.
வீமலர் : வினைத்தொகை. இருபெயரொட்டுமாம். உலவையங்காடு என்புழி அம் சாரியை. கள்ளியங்காடு என்பது போன்றென்க.