பக்கம் எண் :


14


அல்லள் - அவரை நோக்கி இவர் யாவரென்று கேட்பாளல்லள்; அத்தக் குமிழின் கொடு மூக்கின் விளைகனி எறிமடமாற்கு முணாது வல்சி ஆகும் - சுரத்திலுள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து ஆங்குக் குதித்து விளையாட்டயர்கின்ற இள மானுக்கு வெறுப்பில்லாது உணவாகாநிற்கும்; வல்வில் ஓரி கானம் நாறி - வலிய வில்லையுடைய ஓரி என்பவனது கானம்போல நறுநாற்றமுடையவாகி; இரும்பல் ஒலிவரும் கூந்தல் - கரிய பலவாகித் தாழ்ந்த கூந்தலையுடைய அவள்தான்; யாம் வந்தனம் என - யாம் வந்திருக்கின்றேம் என்பதைக் கேட்டவுடன்; பெரும்பேது உறுவள் - களிப்பினாலே பெரிதும் மயக்கமெய்தா நிற்பள்; அங்ஙனம் சென்று கூறுவாரை யாம் பெற்றேமில்லையே ! எ-று.

    (வி - ம்.) தூம்பு - துளை. ஆம்பல் - அல்லியென்று வழங்கப் படுவது. மதன் - அழகு. மாமை - மாந்தளிரின் தன்மை. வல்சி - உணவு. ஒலிதல் - தாழ்தல். பேது - மயக்கம். முணாது - வெறுப்பெய்தாது.. முணைதல் - வெறுத்தல்.பகற்குறிக்கண்ணே தான்கண்டுவைத்து, முயங்கியவழி நீங்குதலின் இப்பொழுதும் உளதாயிருக்குமெனக்கொண்டு மாமையுடைமை கூறினான்; இதனால் அதனை நீக்கத் தோழி முயலுகவென்றானுமாம். முதலிற் கூட்டத்திற்குக் குறிப்புணர்த்தியது நோக்கமேயாதலின், அதனை மழைக்கணெனச் சிறப்பித்து முற்கூறினான். அணைந்தவழி இன்பஞ் செய்தலின் திதலையல்குலென அடைகொடுத்துக் கூறினான். இடந்தலை பாங்கற்கூட்டம் பாங்கியிற் கூட்டத்து முயங்கிக் கிடந்தவழி இன்பஞ் செய்தலின் தோளையுங் கூந்தலையும் பிற்கூறினான். மதனின் மாமை யென்றது பசலைபாய்தல். பெரும்பேதுறுவளென்றது கண்ட வழி உவத்தல்.

    இறைச்சி :- :- குமிழின் கனி மானுக்கு உணவாகுமென்றது, யாம் வந்திருக்கின்றேமென்று கூறும் அச் சொல்லானது நம் தலைவிக்கு மகிழ்வளிக்கு மென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன். அயர்வுயிர்த்தல்.

    (பெரு - ரை.) எறிமடமான் என்புழி எறிதல் - பகையைப் பின்காற்குளம்பால் உதைத்தல், மான் அங்ஙனம் உதைக்கும் இயல்புடையது. முனாது என்றும் பாடம். இதனை, குறுமகட்கு எய்தச் சென்று முனாது செப்பு நர்ப் பெறின் எனக் கூட்டிக்கொள்க. முனாது-முன்னதாக மானுக்கு எனல் வேண்டிய சொல் சாரியையின்றி மாற்கு என உருபு புணர்ந்து நின்றது. (6)

7. நல்வெள்ளியார்
திணை : பாலை.

துறை : இது, பட்டபின்றை வரையாது கிழவோன், நெட்டிடை கழிந்து பொருள்வயிற்பிரிய ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது.