பக்கம் எண் :


148


சிறுநெறி வாரற்க ! - நீங்குதற்கரிய இருண் மிக்க கண்டார்க்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்ற சிறிய நெறியின் கண்ணே வாராதொழிவானாக; எ - று.

    (வி - ம்.) உறைப்ப-மிகவிழ. விறல்-வெற்றி. இதனை "அருந்தவமாற்றியார்" என்னும் (30) பாலைக்கலியுள் 'விறலிழையவர்' என்பதற்கெழுதிய வுரையானுமறிக. குறிய என்பதன் அகரம் தொகும் வழித் தொக்கது. தில்: ஒழியிசை, முளவுமான் - முட்பன்றி. இஃதழிவில் கூட்டத் தவன் புணர்வு மறுத்தல்.

    கண்ணீர்வடிதலெனத்தன்னாலே தேற்றத் தெளியாமை கூறினாள். பிரிந்த ஏக்கத்தால் உடம்பு வாடித் தோள்வளை நெகிழ்ந்தமை கூறுவாளாய் இனி இங்ஙனமிருப்பி னிறந்துபடுமெனவுங் குறிப்பித்தாளென்பது.

    உள்ளுறை :- கானவன் தலைவனாகவும், கொடிச்சி தலைவியாகவும் பன்றித்தசை தலைவன் வரைந்துகொண்டு பொருளீட்டித் தலைவிபாலளிப்பதாகவும், சிறுகுடிப்பகுத்தல் அப்பொருளைக்கொண் டில்லறம் நடத்தற்பாலளாகவுங் கொள்க. இது வெளிப்படை.

    இறைச்சி :- புலியையஞ்சிப் பிடியானை தன் கன்றைக் காத்துத் தங்குமென்றது பிரிவினாலே தலைவிக்கு வரும் ஏதத்தை யஞ்சி யான் அவளைக் காத்திருக்கின்றே னென்றதாம். கண்ணீர்வடிதலென்றது துன்பத்துப் புலம்பல். தோள்வளை நெகிழ்தலென்றது உடம்புநனிசுருங்கல். வாரற்கவென்றது அச்சத்தினகறலும், அவன் புணர்வு மறுத்தலுமாம். ஏனை மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த வெகுளி. பயன் -வரைவுடன்படுத்தல்.

    (பெரு - ரை.) குறு வரி இரும்புலி, என்றும் கொடிச்சி கிழங்கொடு என்றும் பாடவேற்றுமை உண்டு. கொடிச்சி கிழங்கொடு பகுக்கும் என்னும் பாடமே சிறப்புடைத்து.

இனி, கானவன் காட்டில் எய்து கொணர்ந்த தசையைக் கொடிச்சி மனைப்படப்பையிலுள்ள கிழங்கோடு சிறுகுடியோர்க்கெல்லாம் பகுந்தளிக்குமாறு தலைவன் மறையிற்புணர்ந்த களவு மணத்தை இனிப் பலர் அறிமணமாக்கி அவன் நஞ்சுற்றத்தாரை யெல்லாம் மகிழ்விப்பானாக என்னும் உள்ளுறையாகக் கோடலுமாம்.

    இனி, புலிக்கஞ்சுமாயினும் பிடியானை கன்றொடு நின்று அதனைப் பாதுகாக்குமாறு யாங்களும் காமநோய்க்கு அஞ்சுதுமேனும் தலைவன் இருளிடைவருதற்கு அஞ்சி அவன்திறத்தேமாய் அவனை வாராது பாதுகாக்கும் கடமையுடையே மாயினோம் என வாரற்க என்று வரவு மறுத்தமைக்குப் பிறிதோர்ஏது குறிப்பானும் உணர்த்தியபடியாம் என்க.

(84)