கண்ணீர்வடிதலெனத்தன்னாலே தேற்றத் தெளியாமை கூறினாள். பிரிந்த ஏக்கத்தால் உடம்பு வாடித் தோள்வளை நெகிழ்ந்தமை கூறுவாளாய் இனி இங்ஙனமிருப்பி னிறந்துபடுமெனவுங் குறிப்பித்தாளென்பது.
உள்ளுறை :- கானவன் தலைவனாகவும், கொடிச்சி தலைவியாகவும் பன்றித்தசை தலைவன் வரைந்துகொண்டு பொருளீட்டித் தலைவிபாலளிப்பதாகவும், சிறுகுடிப்பகுத்தல் அப்பொருளைக்கொண் டில்லறம் நடத்தற்பாலளாகவுங் கொள்க. இது வெளிப்படை.
இறைச்சி :- புலியையஞ்சிப் பிடியானை தன் கன்றைக் காத்துத் தங்குமென்றது பிரிவினாலே தலைவிக்கு வரும் ஏதத்தை யஞ்சி யான் அவளைக் காத்திருக்கின்றே னென்றதாம். கண்ணீர்வடிதலென்றது துன்பத்துப் புலம்பல். தோள்வளை நெகிழ்தலென்றது உடம்புநனிசுருங்கல். வாரற்கவென்றது அச்சத்தினகறலும், அவன் புணர்வு மறுத்தலுமாம். ஏனை மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த வெகுளி. பயன் -வரைவுடன்படுத்தல்.
(பெரு - ரை.) குறு வரி இரும்புலி, என்றும் கொடிச்சி கிழங்கொடு என்றும் பாடவேற்றுமை உண்டு. கொடிச்சி கிழங்கொடு பகுக்கும் என்னும் பாடமே சிறப்புடைத்து.
இனி, கானவன் காட்டில் எய்து கொணர்ந்த தசையைக் கொடிச்சி மனைப்படப்பையிலுள்ள கிழங்கோடு சிறுகுடியோர்க்கெல்லாம் பகுந்தளிக்குமாறு தலைவன் மறையிற்புணர்ந்த களவு மணத்தை இனிப் பலர் அறிமணமாக்கி அவன் நஞ்சுற்றத்தாரை யெல்லாம் மகிழ்விப்பானாக என்னும் உள்ளுறையாகக் கோடலுமாம்.