பக்கம் எண் :


149


    (து - ம்,) என்பது, தலைவன் இளவேனிற்பருவத்து வருவேனெனக் குறித்துச் சென்று வினைமுடித்து மீண்டுவந்ததைக் கேள்வியுற்ற தோழி, தலைவியை நோக்கி, நாம் முன்பனிக்காலத்து நடுங்கும்படி நம்மைப் பிரிந்து சென்று இளவேனிற்பருவத்தைக் கருதிவந்த தலைவர்தாம் அறநெறியுடையார் காணென உவந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" என்னும் நூற்பாவினுள் (தொல்-கற்- 23 ) 'மரபுடைஎதிரும் உளப்படப் பிறவும்' என்புழி பிற என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
அறவர் வாழி தோழி மறவர் 
    
வேலென விரிந்த கதுப்பின் தோல 
    
பாண்டில் ஒப்பின் பகன்றை மலருங் 
    
கடும்பனி அற்சிரம் நடுங்கக் காண்தகக் 
5
கைவல் வினைவன் தையுபு சொரிந்த 
    
சுரிதக உருவின வாகிப் பெரிய 
    
கோங்கங் குவிமுகை அவிழ ஈங்கை 
    
நற்றளிர் நயவர நுடங்கும் 
    
முற்றா வேனில் முன்னிவந் தோரே. 

    (சொ - ள்.) தோழி மறவர் வேல் என விரிந்த கதுப்பின் தோல் பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம் - தோழீ, வீரர் கையிலுள்ள வேற்படைபோல விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய சிவதை வெள்ளி வட்டிலைப் போல மலரா நிற்கும் கடிய முன்பனியையுடைய அற்சிரக்காலத்து; நடுங்க - நாம் நடுங்குமாறு பிரிந்து பின்பு; காண் தக கைவல் வினைவன்தையுபு சொரிந்த சுரிதக உருவின ஆகி - அழகு பொருந்தக் கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக்கற்களை இட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதக மென்னும் அணிபோன்ற வடிவினவாகி; பெரிய கோங்கம் குவிமுகை அவிழ - பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலர; ஈங்கை நல்தளிர் நயவர நுடங்கும் முற்றா வேனில் - ஈங்கையின் நல்ல தளிர்கள் கண்டார்க்கு விருப்பம் வருமாறு நுடங்கா நிற்கும் முதிராத இளவேனிற் காலத்து; முன்னி வந்தோர் அறவர் வாழி - இன்று நம்மைக் கருதி வந்தாராகலின் நம் தலைவர் அறநெறி தவறுநரல்லர் காண்; அவர் நெடுங்காலம் வாழ்வாராக !; எ - று.