பக்கம் எண் :


173


மலையமான் திருவோலக்கத்தின் முன்பு; புலம் பிரிபேர் இசை வயிரியர் நலம் புரி முழவின் மண் ஆர் கண்ணின் அதிரும் - வேற்று நாட்டிருந்து வந்த பெரிய இசையையுடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வதுபோலும் அதிர்ச்சியோடு; நன்னராளன் நடுங்கு அஞர் நிலை உள்ளுதொறும் நகுவேன் - நன்மையை மேற்கொள்ளும் அவன் தான் நடுங்கிய வருத்தத்தையுற்ற நிலையை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலாலே யான் நகாநிற்பேன்காண் !; எ - று.

    (வி - ம்.) வள்ளுகிர் - நீண்ட நகமுமாம். குண்டு - ஆழம். தேன் - நெய். ஒய்யும் - செலுத்துகின்ற.இதனை மனைவி கேட்பின் 'அவன் யார்மாட்டும் வரம்பின்றி யொழுகுபவன்' என்று வெறுப்புத்தோன்றும்; வெறுத்தவழி அவனை மீட்டும்தான் அடையலாமென்று கருதி யிங்ஙனம் கூறினாள். சினங்கொண்டு கூறின் உரை புலப்படாவாதலால் சினவாது சொல்வேனென்றாள். தனது அன்பு தலைப்பிரியாக் கொள்கை தோன்ற நன்னர் ஆளன் என்றாள். மெய்ப்பாடு - எள்ளல் பொருளாகப் பிறன்கட்டோன்றிய இளிவரல். பயன் - பரத்தை தலைவனைத் தான் அடையச் சூழ்ந்துரைத்தல்.

    (பெரு - ரை.) இந் நிகழ்ச்சியைத் தலைவி அறியின் பெரிதும் ஏதமாம் என்று அங்ஙனம் அதிர்ந்து நடுங்கினன் என்பது கருத்து. இச்செய்தியைத் தலைவியின் பாங்காயினார் கேட்டுத் தலைவிபாற் கூறிய வழி அவள் தலைவனோடு பெரிதும் ஊடுவள். அவ்வழி அவன் தன்மனை தேடி வலிய வருவன் என்பது பரத்தை எண்ணம் என்க. புலம்புரி என்றும் பாடம்.

(100)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, பின்னின்ற தலைமகன் தோழி கேட்பச் சொல்லியது.

    (து - ம்,) என்பது, குறையுறவுணர்தல் முதலாய மூன்றனாலும் இவனொரு குறையுடையான் போலுமென்று தோழி உய்த்துணரநிற்குமிடத்து இரந்து பின்னின்ற தலைமகன் தான் தலைவியிடத்து வைத்த காதலினாலே படுந்துன்பத்தைத் தோழி அறியுமாற்றானே அவள் கேட்பப் பரதவர் மடமகளுடைய கண்களை யான் பார்க்கு முன்பு புலவு நாற்றத்தையுடைய பாக்கமும் எனக்கு இனிதாகவே யிருந்தது; இப் பொழுதோவெனில் அஃது அங்ஙன மின்மையா லிரங்கத்தக்க தாயினதேயென்று வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "மெய்தொட்டுப் பயிறல்" (தொல்-கள- 11) என்னும் நூற்பாவின்கண் வரும் 'குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்' என்னும் விதி கொள்க.