பக்கம் எண் :


179


    
பைந்தாள் செந்தினைப் படுகிளி ஓப்பும் 
    
ஆர்கலி வெற்பன் மார்புநயந்து உறையும் 
    
யானே அன்றியும் உளர்கொல் பானாள் 
    
பாம்புடை விடர ஓங்குமலை மிளிர 
10
உருமுச் சிவந்துஎறியும் பொழுதொடு
    
பெருநீர் போக்கற விலங்கிய சாரல் 
    
நோக்கருஞ் சிறுநெறி நினையு மோரே. 

    (சொ - ள்.) பூ பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரின் - அழகிய வரியையும் அகன்ற வாயையுமுடைய புலியேற்றை இடமகன்ற மலையின் கண்ணே களிற்றியானையோடு போர் செய்கையில்; உறுகண் அஞ்சா குறக்குறுமாக்கள் துறுகல் மீமிசை புகற்சியின் எறிந்த தொண்டகச் சிறுபறைப் பாணி - அவற்றாலுண்டாகும் துன்பத்துக் கஞ்சாத குறவரின் இளமைந்தர்கள் ஆண்டுள்ள பெரும் பாறையினுச்சியிலே மனச்செருக்கோடு ஏறித் தமது கையிலுள்ள சிறிய தொண்டகப் பறையை ஒலிப்பிக்கும் ஓசையானது; அயலது பைந்தாள் செந்தினைப் படுகிளி ஓப்பும் ஆர்கலி வெற்பன் - பக்கத்திலுள்ள பசிய அடித்தண்டினையுடைய செவ்விய தினைக் கதிர்களைக் கொய்ய வந்திறங்குகின்ற கிளிகளை அச்சுறுத்தி யோட்டாநிற்கும் நிரம்பிய ஒலியையுடைய மலைநாடனது; மார்பு நயந்து உறையும் யானே அன்றியும் - மார்பை விரும்பித் தனித்துறைகின்ற யான் ஒருத்தியே யல்லாமல்; பால் நாள் பாம்பு உடை விடர ஓங்குமலை மிளிரச் சிவந்து உருமு எறியும் பொழுதொடு - இரவு நடுயாமத்திலே பாம்பு உறையும் பிளப்புக்களையுடைய உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழும்படியாகச் சினந்து இடிமுழங்கி மோதுகின்ற இருட்பொழுதையும்; போக்கு அற பெருநீர் விலங்கிய சாரல் நோக்கு அருஞ் சிறுநெறி - நடந்து செல்லக் கூடாதவாறு பெரு வெள்ளங் குறுக்கிட்டு ஓடுகின்ற சாரலின்கண்ணே நோக்குதற்கரிய சிறிய நெறியையும்; நினையுமோர் உளர் கொல் - கருதுகின்றவர் பிறர் யாவரேனும் உளரோ?; உளராயின் நம் காதலரை இரவுக் குறிமறுத்து வரைவிடைப் படுத்தாநிற்பர்; எ - று.

    (வி - ம்.) தேம் - இடம், கமழ்தல் - விளங்குதல். புகற்சி - மனச்செருக்கு. தொண்டகம் - குறிஞ்சி நிலத்துக்குரிய சிறிய பறை. ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி வரைதல் வேட்கைப் பொருளது (இறை. 30) என்றமையானும் "போக்கும் வரைவு மனைவிகட்டோன்றும்" (தொல். பொ. 225) என்றமையானும் வரைதல் வேட்கைக்கிளவி முற்றும் தலைவி கூற்றாதலின், ஈண்டுத் தலைவி கூற்றென்க. கேட்போர் - தோழி. எனவே யான்படுங் கவலையை நீ யறியாது