பக்கம் எண் :


188


துணிதல் அற்றத்து உச்சிக் கட்டிய கூழை ஆவின் நிலை என - இருண் மிக்க இராப்பொழுதிலே சேற்றையுடைய தொழுவத்தினின்று வேற்றிடத்திலே கட்டவேண்டு மற்றத்து அங்ஙனஞ் செய்யாது அத்தொழுவத்துள் கீழினும் படுக்கவிடாது நின்ற நிலையிலே நிற்குமாறு தலைக்கயிற்றை யிழுத்து உச்சியிலே தூக்கி மேற்கை மரத்தில் இறுகப்பிணித்த குறுமையாகிய பசுவினது நிலைமையைப் போல; ஒருவேன் ஆகி உலமரக் கழியும் - யான் ஒருத்தியாகியே நின்று உள்ளஞ் சுழன்று வருந்தும் வண்ணம் மெல்ல மெல்ல நீங்கா நிற்கும்; இவ்வேளை யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேனென்று புலம்புவ தன்றி வேறில்லைக்காண்; எ - று.

    (வி - ம்.) இரைக்கும் வாடை பகன்மடிபொழுதெனக் கூட்டுக. இருள்கூர் பொழுதுமுதற் கூழைஆவினுக் கடைமொழிகள். ஒருவேன்-ஒருத்தியாகிய யான், துணிதல் அற்றம் - பெயர்த்து வேறிடத்துக் கட்டுங்காலம். காமநோய் கைகடந்து பரத்தலான் இயக்கமின்றி நிற்றலின் அசையாது பிணித்த ஆவை யுவமித்தாள். இஃது அவலவுவமை, ஆவினை ஓம்புவார்க்கு நல்லறனுளதாமன்றே அவ்வண்ணம் தூதால் அவரைக் கொணர்ந்து என்பாலுய்த் தெனது ஏதங் களையின் நினக்கு அறனாவதென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) உரையாசிரியர் இம்மென என்னும் சொல்லை விரைவுக் குறிப்பாகக் கொண்டு துன்பம் விரைந்து பற்ற என்று பொருள் கூறி அதற்கு ஒரு முடிவும் வருவித்தோதுகின்றனர். இம்மென என்பதனை ஒலிக் குறிப்பாகக் கொண்டு இம்மென இரைக்கும் வாடை என்றலே நேரிதாம். உலமரக்கழியும் இப்பகல் மடிபொழுதில் யான் படும் எவ்வம் உரைக்கல் ஆகா என்று முடித்துக் கொள்க.

(109)
  
    திணை : பாலை.

    துறை : (1) இது மனைமருட்சி.

    (து - ம்,) என்பது, உடன்போயினாள் மகளெனக்கேட்ட நற்றாய் இளமையின்கண் அறிவுமுதிர்ந்தமை நோக்கி வியந்தனளாயினும், இதுகாறும் பிரிந்தறியாதாள் பிரிதற்காற்றாளாய் முன்பு உணவுண்ணவும் வெறுக்குஞ் சிறுவிளையாட்டினையுடையாள் அறிவும் ஆசாரமும் எப்படியறிந்தனள் ? தந்தை சோற்றைக் கருதாளாய் மறுத்துண்ணுஞ் சிறுவன்மையளாயினளேயென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "தன்னும் அவனும் அவளும் சுட்டி" (தொல். அகத். 36) எனவரும் நூற்பாவின்கண் 'நன்மை' என்றதனால் நன்மை குறித்து நற்றாய் புலம்பினள் என்க.

    துறை : (2) மகள் நிலையுரைத்ததூ உமாம்.

    (இ - ம்.) என்பது, வரைந்த பின் இல்வாழ்க்கையின் மணமனைச் சென்றுவந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்துகின்றாள்,