பக்கம் எண் :


200


    
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் 
    
தாமறிந்து உணர்க என்ப மாதோ 
    
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று 
    
இருவெதிர் ஈன்ற ஏற்றிலைக் கொழுமுளை 
5
சூன்முதிர் மடப்பிடி நாண்மேயல் ஆரும் 
    
மலைகெழு நாடன் கேண்மை பலவின் 
    
மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம் 
    
விடரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச் 
    
சேணுஞ் சென்றுக் கன்றே அறியாது 
10
ஏகல் அடுக்கத்து இருண்முகை யிருந்த 
    
குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர் 
    
இன்னும் ஓவார் என்திறத்து அலரே. 

    (சொ - ள்.) தீமை கண்டோர் திறத்தும் தாம் அறிந்து உணர்க என்ப பெரியோர் - கொடிய தீத்தொழிலைச் செய்பவரிடத்து அச்செயலை நேரிலே கண்டு வைத்தும் உள்ளத்தாலாராய்ந்து அத்தொழில் செய்வோர் இனி அதனைச் செய்யா தொழிவாராக என்று பலபடியாக நுவன்று பெரியோர் பொறுத்திருப்பர்; சூல் முதிர் மடபிடி ஏமுற்று நாப்பண் பிண்டம் வழுவ இருவெதிர் ஈன்ற ஏற்று இலைக் கொழுமுளை நாள்மேயல் ஆரும் - அங்ஙனமுமாகாது சூல் முதிர்ந்த இளம்பிடியானை அறியாமையாலே தன் வயிற்றிலுள்ள சூல் அழிந்து புறம் போந்து விழுமாறு பெரிய மூங்கிலில் முளைத்தெழுந்த இலையில்லாத கொழுவிய முளையை விடியலிலே சென்று தின்னாநிற்கும்; மலைகெழு நாடன் கேண்மை - மலைவிளங்கிய நாடன் என்னைக் கை விட்டமை(யால)் அவனுடைய கேண்மையானது; பலவின் மா சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்குத் தொடர்பு அறச் சேணும் சென்று உக்கன்று -பலாவின் கரிய கிளையினின்று கனிந்து கீழே விழுகின்ற காய் முதிர்ந்த பெரிய பழம் பிறர் உண்ணாதபடி மலையின் பிளப்பாகிய அளையினுள் விழுந்தொழிந்தாற்போல தொடர்ச்சியறப் பன்னாளின் முன்னே சென்றொழிந்தது; ஏகல் அடுக்கத்து இருள்முகை இருந்த குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர் - அதனை அறியாது பெரிய மலைப் பக்கத்திலுள்ள இருள் செறிந்த குவட்டிலிருந்த குறிஞ்சியிலுள்ள நல்ல ஊரின்கணிருக்கும் பெண்டிர்தாம்; என்திறத்து அலர் இன்னும் ஓவார் - என்னிமித்தமாக இன்னும் பழிகூறுதலை ஒழிந்தாரிலர்; இனி யான் அதனை எவ்வண்ணம் ஆற்றுவேன் ? எ - று.

    (வி - ம்.) பிண்டம் - கருப்பம். வழுவல் - வெளிப்படல். ஏமுறல் - மயங்குதல்; ஈண்டு அறியாமை மேனின்றது. வெதிர் - மூங்கில்.