பக்கம் எண் :


219


தளர்ந்து திரையுமென்றதாம். யானை ஆட்பெறல் நசையாலே பனையை மோதுமென்றது, ஊழ்வினை உருத்துவந்து ஒருகால் நம்மையு மொறுக்குமென்றதாம். இவ்விறைச்சியால் 'நாளது சின்மை' கூறியதாயிற்று. போதரும்பொழுது வெளிப்படையாகக் கூறினாற் சொகினத்தின் மாறாமாதலால் இறைச்சியாலே பொருள் கொள்ளவைத்தனனாம். 'இளமையிற் சிறந்த வளமையு மில்லை' என்றது, இளமையதருமை கூறியதாயிற்று. "நில்லாப் பொருட்பிணிச் சேறி" என்றது, பொருள் நிலையற்றவாதலிற் செல்லாது ஈண்டே துய்த்தியென 'அன்பினதகலமும், அகற்சிய தருமையும்' கூறியதாயிற்று. ஏனையவும் உய்த்துணர்க. மெய்ப்பாடு - பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.

     (பெரு - ரை.) எனவே, "இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ? ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு" என நெஞ்சிற்கறிவுறுத்தனாயிற்று. பொருளும் என்புழி உம்மை இழிவுசிறப்பு.

(126)
  
     திணை : நெய்தல்.

     துறை: இது, பாணற்குத் தோழி வாயின் மறுத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனாலே தூதாக விடுக்கப்பட்ட பாணன் தலைவியி னூடலைத் தணிக்கும்படி வந்ததறிந்த தோழி, அவனை நோக்கி எங்கள் தலைவி அவனை யல்லாமலே தன் பாவையை வைத்து விளையாடுதற்குக் கழிக்கரைச் சோலையின்கண்ணே செல்லுவா மென்கின்றாளாதலால், அவன் இனி நமது பாக்கத்தில் வருதலால் யாது பயனென மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கற். 9) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.

    
இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை 
    
இறகெறி திவலையிற் பனிக்கும் பாக்கத்து 
    
உவன்வரின் எவனோ பாண பேதை 
    
கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த 
5
கல்லாக் கதவர் தன்னையர் ஆகவும் 
    
வண்டல் ஆயமொடு பண்டுதான் ஆடிய 
    
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்  
    
மெல்லம் புலம்பன் அன்றியுஞ் 
    
செல்வாம் என்னுங் கான லானே. 

     (சொ - ள்.) பாண பேதை கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும் - பாணனே! எம் பேதையானவள்